முல்லைத்தீவில் தாக்குதல்: யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் உட்பட 13 பேர் கைது (Photo)
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அளம்பில் சென்றவர்களுக்கும், அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கும் நேற்று மாலை ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
தாக்குதலின் போது யாழில் இருந்து சென்ற இருவரும், அளம்பில் பகுதியினை சேர்ந்த 18, 37, 45 வயதுடைய மூவரும் என 5 பேர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தினை தொடர்ந்து 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் யாழ்ப்பாணத்திலிருந்து 12 பேர் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை தலா இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 23.06.2022ஆம்
திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.