யாழில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், சபேஷ்வரன் ரஜீவன் மற்றும் கமலநாதன் பானுஷன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முரண்பாடு காணப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு குறித்த முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. அந்த இடத்திற்கு மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டார்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகி பானுஷன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அதன்பின்னர் சந்தேகநபர் தப்பி செல்ல முயன்றபோது கொலை செய்யப்பட்ட மயூரன், சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது சந்தேகநபர் மயூரன் மீதும் அதே கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் தனக்கும் காயம் இருப்பதாக கூறி முறைப்பாடு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

கொலை இடம்பெற்றமை தெரியாத பொலிஸார் குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் கொலை இடம்பெற்றமை தெரியவந்த நிலையில் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ள நிலையில், பொலிஸ் கண்காணிப்பில் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை பானுஷனும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய இணைப்பு செய்தி - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - சுழிபுரம், தொல்புரத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (12.04.2026) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் குடும்ப வன்முறை காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்றைய தினம் மல்ல்கம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டு நட்டத்தை மக்கள் மீது சுமத்தவே முடியாது! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டவட்டமான அறிவிப்பு