அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம்
அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, இந்தத் திட்டம் எதிர்வரும் ஜுலை 1ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளுக்குள், தற்போதைய ஆறுதல் அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைத் திருத்தி, அவற்றை பின்வருமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்தவகையில், அஸ்வெசும நலத்திட்டத்தின் அட்டவணை I இல் சேர்க்கப்பட்டுள்ள இடைக்கால சமூகப் பிரிவிற்கான சலுகை உரிமைக் காலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புக்காக உதவி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக உயர்த்துதல் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்துதல் என்பன ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.
காலம் நீட்டிப்பு
மேற்கண்ட முன்மொழிவுகளுக்கு உட்பட்டு, அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித்தொகைக்கான கட்டண காலத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், மாற்றுத்திறனாளிகள் சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்குவது ஏப்ரலுக்கு பிறகு நிறுத்தப்படும் என்றாலும், அந்தக் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளுக்கான கட்டணம் செலுத்தும் காலம் டிசம்பர் 31ஆம் திகித வரை நீட்டிக்கப்படும்.
அதேவேளை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளிடமிருந்து புதிதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |