எரிவாயு விநியோகிக்க இராணுவத்தினரின் உதவி: மறுக்கும் யாழ். அரசாங்க அதிபர்
எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால் இராணுவத்தினரின் உதவியினைப் பெற ஆலோசிக்கப்படுவதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எரிவாயு விநியோகிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
“ இன்று 27 சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட “எரிவாயு கொள்கலன்களை இராணுவத்தினரின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை”என்ற தலைப்பிலான செய்தியிலே,“எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால் இராணுவத்தினரின் உதவியினைப் பெற ஆலோசிக்கப்படுவதாக”தெரிவிக்கப்படும் கூற்றில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதுடன், அது தவறான செய்தியாகும்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு விநியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணங்கி செயற்படுவதற்கும், விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தங்களது இணக்கப்பாட்டை 25.05.2022 ஆம் திகதியன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களுடான கலந்துரையாடலில் தெரிவித்தனர்.
மாவட்ட செயலகத்துடன் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைத்து செயற்பட்டு வருகின்றனர் என்பதனையும் மாவட்ட செயலகம் தெரிவித்துக்கொள்கின்றது.” என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.