வவுனியாவில் வீடு புகுந்து மாணவர் மீது தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்து மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (15.04.2024) பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியாவில் இருவேறு பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் கடந்த சில நாட்களாக வாய்தர்க்கம் ஏற்பட்டு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு
இந்நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் மாணவன்
ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்பின் நேற்று வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள மாணவனின் வீட்டுக்குள் புகுந்த மற்றைய மாணவன் உள்ளிட்டோர் குறித்த வீட்டில் வசித்த மாணவன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இரு பகுதியினரும் 16 தொடக்கம் 17 வயதான மாணவர்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
