தீயணைப்புக்காக பணம் கேட்ட விவகாரம்! விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிப்பு
யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டுமே வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
யாழ். சுண்டுக்குளிப் பகுதியில் தீ அனர்த்தம் ஒன்று நேற்றைய தினம் (08.04.2023) ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புக்கு கட்டண அறவீடு
இந்த சந்தர்ப்பத்தில் தீயை அணைப்பதற்கு யாழ். மாநகர சபைத் தீயணைப்புப் பிரிவிற்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட நிலையில், பணம் கட்டினால் தான் வர முடியும் என உத்தியோகத்தர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாக எழுந்த கருத்துத் தொடர்பில் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், மாநகர சபையின் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கட்டண அறவீடு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் முற்பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.
பதிலளித்த விதம் தொடர்பில் உரிய விசாரணை
இவ்வாறான நிலையில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தவறான கருத்தை கூறியதாக எனக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
ஆகவே குறித்த உத்தியோகத்தர் பதிலளித்த விதம் தொடர்பில் உரிய விசாரணை
மேற்கொள்ளப்படும் என மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.