2031இல் இலங்கையில் முதலாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள் காணப்படுவார்கள்
இலங்கையில் 2031ஆம் ஆண்டளவில் முதலாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள் காணப்படுவார்கள் என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் சனத் தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே செல்கிறது. யுத்தம், நலிவுற்ற பொருளாதாரம், புலம்பெயர்வு, காலம் பிந்திய திருமணம், குடும்ப கட்டமைப்பு சிதைவுகள், நாகரீகம், கருத்தடைகள், குடும்ப கட்டுப்பாடுகள், என பல்வேறு காரணிகளை கூறிக்கொண்டே போகலாம்.
இந்த காரணிகளால் தமிழர்களின் சனத் தொகை குறைவடைந்து செல்கின்றமையை நாம் கண்முன்னே காண்கின்றோம், வடக்கு கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றில் இணைந்துகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைவடைந்து செல்கின்றமையை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது எமது இனத்திற்கு ஆபத்தானது. ஆரம்பத்தில் யாழ் தேர்தல் தொகுதியில் 11 நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருந்தார்கள், ஆனால் தற்போது 7 நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் தமிழ் மக்களின் சனத் தொகை குறைவடைந்ததன் விளைவே இது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாக இல்லை. தமிழ்த் தலைமைகள் அரசியல் உரிமை பிரச்சினைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவைத்தை இப்படியாக ஒரு இனத்தின் ஆபத்தான பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை. தமிழ் மக்களின் சனத் தொகையானது இப்படியே சென்றால் வென்றெடுக்க உரிமைகளை அனுபவிக்க மக்கள் இருப்பார்களா என்ற கேள்வியே எழுகிறது.
எனவே தமிழினத்தின் சனத் தொகை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர தவறின் 2031 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிறுபான்மை இனமாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள்.
இலங்கையின் சனத் தொகை பெருக்க வீதத்தில் முஸ்லிம்கள்,சிங்களவர்களுக்கு அடுத்தப்படியாகே தமிழர்கள் காணப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட உள மருத்துவர் ம. ஜெயராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துப்படுத்துகின்ற பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.




பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri