இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை தடுக்கப்படும் : கடற்றொழில் அமைச்சர் உறுதி
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ். நெடுந்தீவு பகுதிக்கு நேற்று (29.04.2025) பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கடற்றொழிலாளர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்கு துறை பிரச்சினை சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




