பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது
புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த முக்கிய சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேகநபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று(21.12.2023) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை பொலிஸார் கைது செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பி செல்ல முற்பட்டு பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒரு போதை மாத்திரையை 250 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் புதுகுடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரையும் போதை மாத்திரைகளையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவயில் ஒருவர் கைது
அதிகளவு போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை, லக்சபதிய, ஜூபிலி வீதியில் அமைந்துள்ள, வீட்டிற்குள் காவல்துறை அதிகாரிகள் நுழைந்தவுடன், பின்கதவால் தப்பிச் செல்ல முற்பட்டபோதும் 30 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரது பையில் இருந்து மொத்தம் 2,500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன சந்தேக நபர் காவல்துறையினரார் தேடப்பட்டு வந்தநிலையில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த லக்சபதியே தம்மா என அழைக்கப்படும் தம்மிக்க பிரியங்கர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, அவர் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இடங்களை குறிவைத்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
செய்தி- சிவா மயூரி