போதைப்பொருட்களுடன் வர்த்தகர் உட்பட மூவர் கைது
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் உட்பட மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கேரள கஞ்சா 150 கிராம், ஐஸ் போதைப்பொருள் 10 சிறிய பக்கட்டுகள், ஹெரோயின் ஒரு கிராம், 14 லைட்டர்கள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், இரண்டு செல்லிடப்பேசிகள், போதைப்பொருள் குடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், போதைப்பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தும் பொலித்தீன்கள் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்த முச்சக்கரவண்டி சாரதியையும் மேலும் இருவரையும் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், முச்சக்கரவண்டியை தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கொள்வனவு செய்து நோர்வூட் பகுதியிலுள்ள இளைஞர்களுக்கும், சாரதிகளுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணையின் பின் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.