யாழ்.இளைஞனின் மரணத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்திய இருவருமே இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் ஜூலை 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர்
சம்பவத்தில் உடுவில் செபமாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடக பயிலுநர் நண்பருடன் உயிரிழந்த இளைஞன் எரிபொருள் நிரப்ப அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்ற நிலையில்,இடையில் புகுந்து எரிபொருள் நிரப்ப முற்பட்டவர்களை ஊடக நண்பர் காணொளி பதிவு செய்துள்ளார்.
காணொளி பதிவை தடுக்க எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஊடக பயிலுநரின் கையை முறுக்கியுள்ளார். இந்த சம்பவதிற்காக நியாயம் கேட்க முற்பட்ட இளைஞனை எரிபொருள் நிலையத்தில் உள்ளவர்கள் தலைக்கவசத்தினால் தாக்கியுள்ளனர்.
இதன்போது இளைஞனுக்கு வாய், மூக்கு வழியாக குருதி ஓடிய நிலையில் அங்கிருந்து வீடு சென்றுள்ளார்.
இளைஞன் மறுநாள் மதியம் நெஞ்சுவலி மற்றும் உடல் சோர்வு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உள்ள தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற போது எரிபொருள் நிரப்பு நிலைய சிசிரிவி பதிவு காணப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முன்னிலைபடுத்தபட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மீது கொலை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிஸார் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.
அதனடிப்படையில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் ஜூலை 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தனது சட்டதரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விசாரணைகளின் பின் இன்று(25) பிற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட முகாமையாளர் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முகாமையாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, அவரை வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ரணிலை கடுமையாக எச்சரிக்கும் மகிந்த குழுவினர் - வெடித்தது உள்ளக மோதல் |