கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து
கிளிநொச்சி - கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்திற்கு இலக்கானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கப்பல் ஒன்றினை இழுத்துச் சென்ற இராணுவ வாகனமும் சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகி வீதியை விட்டு விலகியுள்ளன.
குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.