இராணுவம், செய்யக்கூடிய காரியங்களை மாத்திரமே செய்யவேண்டும் - வலியுறுத்தும் எதிர்கட்சி!
அரசாங்கத்தை நாளைய தினத்திலேயே பொறுப்பேற்க தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 29 “ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய பிரகடனம்” வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்தை முன்னேற்றுவது எவ்வாறு? எதிர்காலத்தில் விவசாயத்தில் விவசாயத்தில் மேற்கொள்ளப்பட்டவேண்டியவைகள் என்பவற்றை உள்ளடக்கி இந்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான குழுவினர் இன்னும் சீனாவில் இருந்து சேதனப்பசளைகளை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிக்கின்றனர்.
எனினும் அது கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென்று நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் விவசாயிகள் அடைந்துள்ள நட்டத்தை ஈடு செய்வதற்கு அரசாங்கம் 40ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வது போதுமானதல்ல.
அவ்வாறு நட்டஈடு வழங்கும் போது, எங்கிருந்து பணத்தை வழங்குவது, பணத்தை அச்சிட்டே வழங்கவேண்டும். அவ்வாறு அச்சிட்டு வழங்கினால், அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்து மீண்டும் விவசாயிகளை பாதிக்கப்படப்போகின்றனர் என்று நளின் பண்டார குறிப்பிட்டார்.
இதேவேளை இராணுவத்தளபதியை இயற்கை விவசாயம் தொடர்பிலான குழுவுக்கு நியமித்துள்ளமையை விமர்சித்த நளின் பண்டார, இராணுவத்துக்கு தாம் மதிப்பளிக்கின்ற போதும் எல்லா விடயத்திலும் இராணுவத்தை பயன்படுத்துவது ஏற்கத்தக்க விடயம் அல்ல என்றும் குறிப்பிட்டார்
.
அரசர்கள் காலத்தில் முன்னேற்றமடைந்த விவசாயத்துறையை இன்று கோட்டாபய நாசம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.