வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினராக சுவேந்திரா நியமனம்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினராக இ.சுவேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தது.
இதனைத் தனது கட்சி உறுப்பினர்களுக்குச் சுழற்சி முறையில் வழங்கக் கட்சியின் மாவட்ட செயற்குழு தீர்மானித்திருந்தது.
அதற்கமைவாக, முன்னர் பதவி வகித்த ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஐ.செல்வநாயகம் பதவி விலகிய நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இராசையா சுவேந்திரா புதிய பிரதேச சபை உறுப்பினராகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில், கட்சியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார் மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மயூரசர்மா ஆகியோர் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.