ஜனாதிபதி அநுர குமார கொள்கையளவில் உயிருடன் இல்லை! வன்மத்தைக் கொட்டும் விமல்..
"நாட்டின் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழல் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப முழுமையாக ஆடிக்கொண்டிருக்கின்றது" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொள்கையளவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கொள்கையளவில் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கைக்கு இன்னும் எரிபொருளால் நஷ்டம் ஏற்படுவதாகப் போலிக் காரணங்களைக் கூறி, அதன் விலையை மேலும் உயர்த்தவே அரசாங்கம் தற்பொழுது திட்டமிட்டு வருகின்றது. எமக்கு ஏற்பட்ட உண்மையான பிரச்சினை கடனைச் செலுத்துவதற்குப் போதிய வெளிநாட்டு கையிருப்பு இல்லாததே ஆகும்.
மீள முடியாத பாரிய கடன் சுமை
ஆனால், இன்று புதிய வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்குப் பதிலாக, இருக்கும் டொலர்களையும் அரசாங்கம் முற்றிலும் அழித்து வருகின்றது.
வெறும் கடன் வாங்குவதன் மூலம் மட்டும் இந்த டொலர் நெருக்கடிக்கு ஒருபோதும் நிலையான தீர்வு காண முடியாது. வேண்டுமானால் வாங்கும் புதிய கடனைக் கொண்டு தற்காலிகமாக மூன்று எரிபொருள் கப்பல்களை மாத்திரமே நாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கான எந்தவொரு முறையான உத்தியோகபூர்வ திட்டமும் இந்தத் திசைகாட்டி அரசாங்கத்திடம் இல்லை.

எமது நாட்டு மக்கள் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் டொலர்களைக் கொண்டுதான் டட்லி சிறிசேன போன்ற பெரும் முதலாளிகள் 'ரோல்ஸ் ராய்ஸ்' போன்ற ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்கின்றார்கள்.
இருக்கும் டொலர்களைக் கூட அரசாங்கம் பாதுகாப்பதில்லை. வெளிநாட்டு நாணயச் சட்டத்தை மாற்றி, ஈட்டப்படும் டொலர்களையாவது முறைப்படி இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு திட்டமும் இவர்களிடம் இல்லை.
இதனால் உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடாக இன்று இலங்கை மாறியுள்ளது.
பிரீமியம் கட்டணம் மூலம் நுகர்வோர் கொள்ளையடிக்கப்படுவதாக அன்று எதிர்க்கட்சியில் இருந்து அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் முழங்கிய போதிலும், அன்று பேசிய அந்த அநுரகுமார இப்போது கொள்கையளவில் உயிருடன் இல்லை.
மேலும், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் மக்களுக்குக் கூறுவது வேடிக்கையானது. மக்கள் ஒன்றும் எரிபொருளைக் குடிப்பதோ அல்லது அதனை வைத்து வேடிக்கை பார்ப்பதோ இல்லை. மரண வீட்டின் நடுவே திருமணக் கொண்டாட்டங்களை நடத்த முடியாது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கையில் இருக்கும் பணத்திற்கு அமைவாகவே செலவு செய்ய வேண்டும்.
அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்து சர்வதேச ரீதியாகக் கடன் வாங்குவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினர் மீது மீள முடியாத பாரிய கடன் சுமை திணிக்கப்படுகிறது.
இந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டின் மக்கள் மாத்திரமன்றி, ஜே.வி.பி. என்ற கட்சியும் இன்று முழுமையாக அழிந்துபோயுள்ளது. இது ஜே.வி.பியின் உண்மையான கொள்கை அல்ல. தங்களுக்கு நெருக்கமான நண்பர்களின் கூட்டமைப்பை மாத்திரமே இவர்கள் இன்று திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் பாதையில் செல்வதற்குக் தற்போதைய ஜனாதிபதியை விட ரணில் விக்ரமசிங்கவே ஆகச் சிறந்தவர். ஜனாதிபதி அநுரகுமார தற்போது ஒரு 'மொண்டிசூரி' மனநிலையில்தான் இருக்கிறார். உண்மையில் ஐ.எம்.எவ். பாதையில் செல்லாமலேயே கடனை வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்ய முடியும்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளைப் பெற்று நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி நெருக்கடிக்கு எம்மால் இலகுவாகத் தீர்வு காண முடியும்.

எதிர்கால அரசியல் கூட்டணிகள் குறித்து எழும் கேள்விகளுக்கு, தற்போதைய அரசாங்கம் செல்லும் இதே தவறான பாதையில் பயணிப்பதாக இருந்தால், நாங்கள் யாருடனும் அரசியல் ரீதியாக இணையப் போவதில்லை.
அவ்வாறான ஒரு நாசகாரப் பயணத்திற்காக யாரையும் ஆட்சிக்குக் கொண்டுவர நாங்கள் தயாரும் இல்லை. ஆனால், நாங்கள் காட்டும் சரியான மாற்றுப் பாதையில் பயணிப்பதாக இருந்தால் மாத்திரமே இணைந்து எதிர்காலக் கூட்டணிகளை அமைக்கத் தயாராக இருக்கின்றோம்.
இப்போது 'சூப்பர் மேன்'களின் காலம் முடிந்துவிட்டது. தற்போதைய பலவீனமான எதிர்க்கட்சிதான் இந்த அரசாங்கத்திற்கு இருக்கும் மிகப்பெரிய காப்புறுதியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்களா என வினவப்பட்டதற்கு, அப்படி நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனை நாட்டின் பொதுமக்களே இறுதித் தீர்மானமாக எடுக்க வேண்டும் என்றும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதைய இதே தவறான பொருளாதாரப் பாதையில்தான் நாடு பயணிக்கப் போகிறது என்றால், அதனால் நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan