நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனை
சர்வதேச சமூகத்தின் பிரிவுகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களின் கரிசனைகளுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம், நாடாளுமன்றில் தற்போதைய கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை முன்வைத்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி, ஒரு சந்தேக நபரை பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மூன்று மாதங்களுக்குத் தடுத்து வைக்க முடியும்.
ஆனால் புதிய சட்டமூலத்தில் அது இரண்டு மாதங்களாக அது குறைக்கப்பட்டுள்ளது, தடுப்பு உத்தரவு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதவான்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம்
மேலும், புதிய யோசனையில் பயங்கரவாதத்தின் வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எந்தவொரு அமைப்பையும் தடைசெய்வதற்கும், தனிநபர்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும், எந்தவொரு இடத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்துவதற்கும், ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய நடைமுறைகளுக்கான அதிகாரம் போன்றவை ஜனாதிபதிக்கு செல்கிறது.
அத்துடன் பொலிஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்கப்பட்டால் அது நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது, அதேசமயம் இராணுவப் படையினரோ அல்லது கடலோரக் காவல் படையினரோ கைது செய்யும் எந்தவொரு நபரையும் 24 மணி நேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இலங்கை அல்லது வேறு எந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான முறையில் ஒரு அமைப்பு ஏதேனும் செயலில் ஈடுபட்டாலோ அல்லது சட்டவிரோதமான முறையில் செயற்பட்டாலோ, எந்தவொரு எழுத்துமூல சட்டத்தில் உள்ள எதையும் பொருட்படுத்தாமல், அந்த அமைப்பை தடைசெய்யும் ஏற்பாடுகளை புதிய சட்டமூலம் ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
இதேவேளை குறித்த சட்டமூலம் திருத்தப்பட்டாலும், சர்வதேச சமூகம், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பயங்கரவாதத்தின் பரந்த வரையறை குறித்து இன்னும் அக்கறை கொண்டிருக்கின்றன. அத்துடன் சிவில் சமூகத்தின் விமர்சனக் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்றும் அந்த நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |