பயங்கரவாத தடுப்புச் சட்ட எதிர்ப்பு:மனுவில் கையெழுத்திட்ட பேராயர்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுத்தி மக்களிடம் கையெழுத்து பெரும் மனுவில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில், அனைத்து இனத்தவரும் அங்கம் வகிக்கும் சிவில் மற்றும் அரசியல் அமைப்புகளின் உதவியுடன் மனுவில் கையெழுத்து பெறும் திட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணயக்கியன் ராசமணிக்கம், பேராயரை சந்தித்து மனுவில் கையெழுத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் தற்போது கொண்டு வரவுள்ள பயங்கரவாத தடுப்பு தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு உட்பட சர்வதேச அமைப்புகளின் கோரிக்கை மற்றும் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய உருவாக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.