இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதான நபர், ஏப்ரல் மாத இறுதியில் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸ்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏனையவர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக வைத்தியர் தேஜனா சோமதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா உட்பட ஆசியாவில் வேகமாக பரவி வரும் கொவிட் வைரஸ் தொற்றின் புதிய திரிபு இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது, இதன் காரணமாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார அமைச்சு இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.