தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க விடுக்கப்பட்ட அழைப்பு
எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நெருக்கடி
அதில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது.
ஆனால் 2009க்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கின்றது.
காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனை எதிர்கொள்வதே பாரிய சவாலாக உள்ளது.
அதிலும் பிரிந்து நின்று எதிர்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே ஒன்றாக இணைந்து அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும்
தற்போது தமிழ்க் கட்சிகளின் பதவி சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு, பல அணிகளாகப் பிரிவடைந்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும்.
இந்தத் தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கின. இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. அவற்றை அவர்கள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும்.
இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும்.
ஆகவே, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களிலும் சரி, தமிழ்த் தேசிய உரிமை ஜனநாயகப் போராட்ட விடயங்களிலும் சரி, ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே அவசியமாகும். அதனையே மக்களும் விரும்புகின்றார்கள்.
தமிழ்த் தேசிய இருப்பு
கடந்த பல வருடங்களாக இவ்வாறான ஐக்கிய முயற்சிகளை ஏற்படுத்தியவர்கள் என்கின்ற வகையிலும் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் எனக் கோரிக்கை விடுத்ததன் உரிமையிலும் எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றோம்.
அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆளுக்கு ஆள் துரோகிப்பட்டம் வழங்குவதையும், ஒரு கட்சி வந்தால் இன்னொரு கட்சி வரமாட்டேன் எனக் கூறும் வரட்டு வாதங்களையும் அடியோடு மறந்து விடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
நடந்து முடிந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குத் தார்மீக பொறுப்பெடுக்க வேண்டியது சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஆகும்.
தேசிய கட்சிகளுக்குள் கரைந்து போவது என்பது தமிழ்த் தேசிய இருப்பை ஒருபோதும் கூர்மையாக தக்க வைக்க கூடிய கள நிலையை உருவாகாது என்பதனையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, எமது முயற்சிக்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
