கிரிப்டோகரன்ஸிகள் குறித்து மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!
கிரிப்டோகரன்ஸிகள் குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது இலங்கையில் உள்ள எந்தவொரு தனிநபரின் பொறுப்பாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
சில வங்கிகள், குறிப்பாக சொகுசு குடியிருப்புகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், விற்பனையில் கிரிப்டோகரன்ஸிகள் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக விளம்பரம் செய்துள்ளன.
இந்நிலையில், இலங்கையில் இத்தகைய பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுமா என கொழும்பு ஊடகம் ஒன்று வினவிய கேள்விக்கு மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு பதிலளித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கிரிப்டோகரன்ஸிகள் குறித்த எங்கள் கொள்கை மாறவில்லை. நாங்கள் அதே கொள்கையை பின்பற்றுகிறோம். மக்கள் வெவ்வேறு நாணயங்களைப் பயன்படுத்தினால், அதன்மூலம் ஏற்படும் ஆபத்துகளுக்கு பொது மக்களே பொறுப்பு.
இலங்கையின் நாணயம் ரூபாய். அதைத் தவிர வேறு எதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை ”என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் T.M.J.Y.P பெர்ணான்டோ இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையில்,
“இதில் உள்ள ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும், இது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் இருந்தால், அதனால் ஏற்படும் ஆபத்தை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.