காணி விடுவிப்பு தொடர்பில் அமெரிக்க செனட் சபை குழுவினருடன் கலந்துரையாடல் (Video)
மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு தொடர்பாக அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலானது நேற்று முன்தினம் (07.11.2022) மாலை இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு வந்த அமெரிக்க செனட் சபை குழு
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மக்களின் காணிகளை மக்களிடமே வழங்க நடவடிக்கை
மேலும், சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, 1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.
பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்தார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.




