இலங்கையின் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இணைந்திருக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையின் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கும் என்று ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முக்கிய குழுக்கள் உட்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடைசெய்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் தமது இணைப்புக்காகப் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பெறுமதிமிக்க பங்காளிகளாகச் செயற்படுகின்றன.
எனவே தென்னாசிய புலம்பெயர் அமைப்புக்கள் உட்பட்ட இலங்கையின் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தாம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் இணைந்திருக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக தமிழர் பேரவை (ஜிடிஎப்), பிரித்தானியத் தமிழ் பேரவை( பிடிஎப்), கனேடியன் தமிழ் காங்கிரஸ் (சிடிசி), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ஏடிசி), கனேடிய தமிழர்களின் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலக தமிழர் இணைப்புக்குழு என்பன இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிக்கு இணங்கவே இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் கையெழுத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, மலேசியா உட்பட்ட நாடுகளின் தனிப்பட்டவர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் உள்ளடங்குகிறார்.
ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நல்லிணக்கத்தைக் கருதி இலங்கையின் புலம்பெயர் குழுக்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் தடைகள் நீக்கப்பட்டன.
எனினும் இந்த அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களாகவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கான தடை. ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது.