கள் விற்பனை நிலையங்களை நிபந்தனையுடன் திறப்பதற்கு அனுமதியுங்கள்! - பிரதமருக்கு கடிதம்
கள் விற்பனை நிலையங்களை வாழ்வாதார தொழிலாகச் செய்து வருகின்ற ஏழைக் குடும்பங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு கள் விற்பனை நிலையங்களை நிபந்தனையுடன் திறப்பதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் அவர், கள் விற்பனை நிலையங்களை மூடுவதன் மூலம் அதனை வாழ்வாதார தொழிலாகச் செய்து வருகின்ற ஏழைக் குடும்பங்களே பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த கடிதத்தில் மேலும்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை காரணமாகக் கள் விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் விடயமாகும்.
ஏனெனில் இக்குடும்பங்கள் அனைத்தும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் என்பதோடு, தற்போதைய காலம் கள் உற்பத்திக்கான பருவ காலமாகும். எனவே இக் காலத்தில் கள் விற்பனை கடைகளை மூடுவதனால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
எனவே தாங்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்திப் பின்வரும் நடைமுறைகளுக்கு அமைவாகக் கள் விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
அதாவது நுகர்வோர் கள்
விற்பனை நிலையங்களில் வைத்து அருந்துவதனை தடுத்து கொள்வனவு செய்து
செல்வதற்கும், களஞ்சியத்தில் உள்ள போத்தலில் அடைக்கப்பட்ட கள் அல்லது
புதிதாக உற்பத்தி செய்கின்ற கள்ளைப் போத்தலில் அடைத்து விற்பனை செய்யும்
நடைமுறைகளுக்கு அமைவாகத் திறப்பதற்கு தாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
