தமிழ் மக்களை ஏமாற்ற பொய்க்கோபம் காட்டும் கூட்டமைப்பினர் பதவி விலகுவார்களா?
""எங்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்"" என நாடாளுமன்றத்தில் இலங்கையின் நீதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பார்த்து கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கோவப்பட்டு பேசினாரென தமிழ் செய்தி ஊடகங்கள் பரவலாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இங்கே உண்மையில் ஏமாற்றியது சிங்களத் தலைவர்கள் அல்ல மாறாகத் தமிழ் தலைவர்கள்தான் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மையாகும். இப்போது இரா. சம்பந்தன் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கிறார். இந்தவார தமிழ் ஊடகச்செய்திகளின் சாரம் இதுதான்:
""இவ்வருட அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்தபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சம்பந்தன் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார்"" எனவும், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நேரில் கண்டு, ""நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்"" என்று ஆவேசமாக ஏசினாரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை ""மிக மோசமான உரை"" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சொல்வது மிகவும் பொய்யானது.
இவ்வாறு தமிழ் அரசியல் தலைவர்கள் சொல்வார்களானால் அது அவர்களுடைய அறிவீனத்தை, பலவீனத்தை, கோமாளித்தனத்தை, ஏமாளித்தனத்தை, அவர்களுடைய போலி முகத்தைப்படம் பிடித்துக் காட்டுவதாக அமையும். சிங்கள மொழியில் ஒரு பழமொழி உண்டு ""முதலில் ஆம் என்ற சொல் பின்னே பார்த்துக் கொள்ளலாம்"".
இங்கே பின்னே பார்த்துக் கொள்ளலாம் என்பதன் பொருள் என்னவெனில் கால நீட்டிப்பு செய்து இழுத்தடித்து ஏமாற்றுவது என்பதாகும். இதனை அவர்கள் நிரந்தரமாகப் பேணுகிறார்கள் எனவே அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. இது அறிவார்ந்த சமூகத்துக்கு இழுக்கானதும்,வெட்கக் கேடானதுமாகும்.
சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரை எதிர்த்தரப்பை மாற்றுவதுதான் அவர்களின் அரசியல் தொழில். அது அவர்களின் தொழில் தர்மமும் அரசியல் இராஜதந்திரமுமாகும். தமிழ் மக்களை அரசியல்ரீதியாக ஏமாற்றுவதுதான் அவர்களுடைய அரசியல் இலக்கு. ஆகவே சிங்கள தேசிய இனத்தைப் பாதுகாப்பதும், இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலை நிறுத்துவதும், அதற்குச் சொந்தம் ஆக்குவதுதான் அவர்களின் இலட்சியம்.
அந்த இலட்சியத்தை அடைவதற்கு அவர்கள் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் தரப்பிலிருந்து பார்க்கின்றபோது அது அவர்களின் அரசியல் தர்மமாகின்றது. சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
அதற்காகவே அவர்கள் செயல்படுகிறார்கள். அதுவே அவர்களின் இயல்பாகும் அந்த இயல்பை எம்மால் மாற்றிவிட முடியாது. அதனைப் புரிந்து கொள்ளத்தான் முடியும். புரிந்து கொண்டால் அதற்கேற்ப செயற்படுவதுதான் எமது அறிவார்ந்த செயலாகும்.
பகவத்கீதை ""அரசர்க்குத் தர்மம் அமர் புரிதல் அதுவே அவர்களுக்கு மேலான சாசனம்"" என்கிறது. போரில் எதிரிகளைக் கொல்வதுதான் அரசனுக்குரிய தர்மம். அந்த அடிப்படையிலேதான் சிங்கள தலைவர்கள் தமது தரப்பினர்க்காக எத்தகைய பாதகச் செயல்களையும், ஏமாற்றுக்களையும் மேற்கொள்கிறார்கள். அதில் அவர்கள் உறுதியாகவும், தெளிவாகவும், விவேகமாகவும் தொடர்ந்து செயற்படுகிறார்கள் என்பதுதான் உண்மையானது.
ஆனால் அவர்களுடைய இத்தகைய அரசியல் இராஜதந்திர சித்து விளையாட்டுகளில் அடிபட்டு வீழ்ந்து, தோல்வியடைந்து, குப்புற விழுந்துவிட்டு , ""விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை "" என்பது போல இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் "" சிங்கள தலைவர்கள் தம்மை மாற்றிவிட்டார்கள்"" என்று காலம் காலமாகத் தமிழ் மக்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
இவர்களால் சிங்களத் தலைவர்களிடம் வெற்றிபெற முடியவில்லை அல்லது சிங்களத் தலைவர்களை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் நேர்மையாக தங்களால் சிங்களத் தலைவர்களை எதிர்கொள்ள முடியாது என்று சொல்லி அரசியலிலிருந்து ஒதுங்கிச் செல்லட்டும். புதியவர்கள் வந்து சிங்களத் தலைவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
தொன்மையான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட தமிழ் மக்களிடம் அறிவார்ந்த இளம் தலைவர்கள் இருக்கிறார்கள். ஏற்படுகின்ற வெற்றிடத்தை அவர்களால் நிச்சயமாக நிரப்ப முடியும். அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரும் இல்லை என்ற கவலை இந்த பாசாங்கு அரசியல் தலைமைகளுக்குத் தேவையில்லை.
எனவே இவர்களால் முடியாவிட்டால் நாடாளுமன்ற பதவியையும் அரசியலையும் விட்டு இவர்கள் விலகி ஒதுங்கிச் செல்லட்டும்.
அதைவிடுத்து நாடாளுமன்ற சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு போலி வேஷங்கள் போடுகிறார்கள். இவ்வாறு இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற வரலாறு மிக நீண்டது. கடந்த நூறு ஆண்டுக்கால ஈழத்தமிழர் வரலாற்றில் இத்தகைய அரசியல் வாதிகளினால் தமிழ் மக்களுக்கான உரிமைகள் எதனையும் பெறமுடியவில்லை.
இலங்கை சுதந்திரத்தின் பின்னர் 1948ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று மந்திரி பதவியைப் பெற்று டி.எஸ். சேனநாயக்காவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார்கள்.
தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு மேல் பதவியிலிருந்து தமது பணப்பெட்டியை நிரப்பியதோடு தமிழர் தாயகத்தில் அம்பாறையில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவனத்திலேயே முடிந்தது.
“எட்டாம் வகுப்பு படித்த டி. எஸ். சேனநாயக்கா” என எள்ளிநகையாடிய தமிழ் சட்ட மேதைகள் சேனநாயக்காவின் அரசியலில் அடிபட்டு, துவை பட்டு அமைச்சுப் பதவிக்காக சேனநாயக்காவின் காலில் வீழ்ந்து நசிந்துபோனதை வரலாறு பதிவாக்கியிருக்கிறது.
பின்னர் பண்டா-செல்வா ஒப்பந்தம் மூலம் ஏமாந்து விட்டோம் என்று கூறிய தமிழரசுக் கட்சித் தலைவர்கள், பின் டட்லி செல்வா ஒப்பந்தம் மூலம் முறையே தமிழரசுக்கட்சி அமைச்சுப் பதவியையும், தமிழ் காங்கிரஸ் கட்சி உதவி சபாநாயகர் பதவியையும் பெற்று காலத்தைக் கழித்தார்களே தவிர எதனையும் சிங்கள அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்காகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
பின்னர் தேர்தல்களில் தோல்வியடைந்த தமிழரசு- தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் கூட்டுசேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தார்கள் அதனூடாக வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். ஆனால் அந்த தீர்மானத்தை ஆக்கபுர்வமான செயல் வடிவிற்குக் கொண்டுசெல்லாமல் மீண்டும் சிங்கள நாடாளுமன்ற கதிரையில் குந்தி ஒட்டிக்கொண்டார்கள்.
இதனையடுத்து 30 ஆண்டுக்கால ஆயுதப்போராட்டம் 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் மௌனிக்க மிண்டும் அரசியலுக்கு வந்த மிதவாதத் தலைவர்கள் தமது பழைய கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டனர். “தீர்வு இல்லையேல் போர் வெடிக்கும்“ என 2013ஆம் ஆண்டு வவுனியாவில் தமிழரசுக் கட்சி மகாநாட்டில் மாவை சேனாதிராஜா மேடையில் வாயால் வெடித்தார்.
வடமாகாண சபை நிர்வாகிகள் சங்க கூட்டம் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் ‘‘போர் ஓயவில்லை‘‘ என சூளுரைத்தார். ‘‘ கொழும்பு எம்மை ஏமாற்ற முயன்றால் அரசை முடக்கும் போராட்டம் வெடிக்கும்” என்றார் “புலிகளின் பலம் பொருந்திய சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்றார் .
இவ்வாறு பல மேடைகளிலே ""போர் வெடிக்கும், போர் வெடிக்கும்"" எனத் தொடர்ந்து முழங்கிறார். அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ""இவ்வாண்டு (2016) முடிவுக்குள் எப்படியும் தீர்வு"" ""தீபாவளிக்கு முன் தீர்வு"" ""தீர்வின் பின்னே தைப்பொங்கல் பிறக்கும்"" தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை.‘ என எச்சரித்து ""தீர்வுத்திட்டம் இல்லையேல் நாம் ஒரு தீர்மானத்தை எடுக்க நேரிடும்"".
""இரண்டு வாரத்துக்குள் நல்ல செய்தி வரும்“ என்றெல்லாம் பொய் உரைத்தார்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக எந்த நற்செய்தியும் கிட்டவில்லை என்பதுதான் ஈழத் தமிழரின் துரதிஸ்டவசமான அரசியலாய் மிஞ்சியுள்ளது. அவ்வாறே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ""புதிய அரசியலமைப்பு வராவிடில் நாடு பேரழிவை சந்திக்கும்.
ஒற்றையாட்சி முறையைத் தகர்க்க வேண்டும்"" என்றார். இது எல்லாம் மேடைகளில் தமிழ் தலைமைகளின் பொய்யான வாய்வாள் வீச்சுகள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமிழ் தலைமைகள் எடுத்த அரசியல் முடிவுகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறன.
2010 ஜனாதிபதித் தேர்தலில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் நேரடியாகக் களத்தில் நின்ற சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி மக்களை வழிநடத்தித் தோற்றுப் போயினர். அடுத்து இரண்டு சிங்களத் தேசியக் கட்சிகளையும் ஆதரித்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தனர். இங்கே வெறும் கோஷங்களும், தூய கொள்கைப் பிரகடனங்களும் முக்கியமல்ல.
இளம் யுத்த விதவைகளுக்கு தமது பணக் குவியல்களிலிருந்து ஒரு சதங்கூட ஈயாத கொள்கைப் பிரகடனப் பேர்வழிகள் எம் முன்னே தலைவர்களாய் காட்சியளிக்கும் பரிதாபம் கண் முன்னே விரிகிறது. சொத்தைச் சேர்க்கவும் சேர்த்த சொத்தைப் பாதுகாப்பதற்குமான அரசியல் வாதிகள் எமக்கு வேண்டாம்.
இன்று "நண்பர்கள் போலும் எதிரிகளான" தமிழ் தலைவர்களிடமிருந்து தமிழ்த் தேசியத்தையும் தமிழர் போராட்டத்தையும் பாதுகாக்க வேண்டியது உடனடித் தேவையாகவுள்ளது.
தமிழ் மக்களின் பெயரால் அரசியல் செய்து அதன்மூலம் சொத்துக்களைத் தேடுவதும் , தேடிய சொத்துகளையும் பரம்பரைச் சொத்துக்களையும் பாதுகாப்பது என்பதை தமது உள்ளார்ந்த இலட்சியமாகக் கொண்டு தமிழ் மக்களின் பெயரால் பொய்யான இலட்சியங்களையும் பொய்யான கோஷங்களையும் முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் போலித் தலைவர்கள் மலிந்துவிட்டார்கள்.
இருக்கின்ற அரசியல் சூழமைவில் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே பேசவேண்டும். அதை விடுத்து வெறும் கற்பனாவாதத்தில் திளைத்து வானில் கோட்டைகட்டி தரையில் கட்ட வேண்டிய குடிசையைப் புறந்தள்ள முடியாது.
எனவே முதலில் இந்த அரசியல் கட்சிகள் தங்கள் இலக்கு என்ன? அந்த இலக்கை அடைவதற்கான கொள்கை என்ன ?அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் என்ன ? என்பதை அறிவிக்க வேண்டும். செயல் திட்டம் இல்லாமல் கொள்கை இருக்க முடியாது.
அதாவது செயல் திட்டம் இல்லாத இலட்சியம், கொள்கை என்பன ஓட்டை பாத்திரத்தில் வார்க்கும் அமிர்த பானமாகும் . அரசியலை , அறிவியல் பூர்வமாகச் சிந்திப்போமேயானால் கல்லில் காலை கொண்டுபோய் மோதிவிட்டு ""காலில் கல் அடித்துவிட்டது"" என்று சொல்கின்ற பொய்யான முறைமைக்குள் தமிழ் அரசியல்வாதிகள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
இங்கே கல்லில் காலை மோதி விட்டோம் எனச் சொல்லத் தவறுகிறார்கள். அதை சிந்திக்கவும் மறுக்கிறார்கள். இங்கே தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்களிடம் ஏமாறுகிறார்கள் என்பதுவும் தமிழ் மக்களைத் தமிழ் தலைவர்கள்தான் என்றும் ஏமாற்றுகிறார்கள் என்பதுவுமே உண்மையானது.
ஆகவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆயினும் சரி, தமிழரசுக் கட்சி ஆயினும் சரி, தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆயினும் சரி இவர்கள் காலாகாலமாக தமிழ் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார்கள். இது மாற்றுத் தலைமைகள் என்று சொல்லப்படுகின்ற அணியினருக்கும் பொருந்தும்.
இவர்கள் யாராயினும் சரி சிங்களத் தலைவர்களிடம் இருந்து தமிழ் மக்களுக்காக ஒரு குண்டுமணியைத்தானும் பெற்றுக் கொடுக்க முடியாது. இவர்களால் சிங்களத் தலைவர்களை வெற்றி கொள்ளவும் முடியாது என்பதே யதார்த்தமானது. ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு மக்கள் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரகடனம் செய்து தேர்தலில் மூன்றில் இரண்டு வீத வெற்றியை ராஜபக்சக்கள் பெற்றார்கள்.
அதன் மூலம் ஆட்சி அமைத்திருக்கும் கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சிங்கள மக்களுக்கு நேர்மையாகச் செயல்படுகிறார். அதற்காகத்தான் ஞானசார தேரரின் தலைமையில் "" ஒரு நாடு; ஒரு சட்டம் "" என்பதற்கான ஆணைக்குழு "" ஒன்றையும் நிறுவிச் செயல்படுத்துகிறார். இங்கே அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை அவர்கள் சொன்னதைச் செய்கிறார்கள் அவ்வளவுதான்.
"" ஒரு நாடு; ஒரு சட்டம்"" என்பதிலிருந்து "" சமஷ்டி "" என்ற பேச்சுக்கு இடமே கிடையாது. அதிகாரப் பரவலாக்கல் என்ற சொல்லுக்கு இங்கே அர்த்தமும் கிடையாது.
இன்றைய அரசியல் சூழலில் அவர்கள் தமிழ் மக்களுக்கு 13ஆம் திருத்தம் என்றும் 13க்கு மேல் சென்று ஒரு அரசியல் தீர்வை தருவார்கள் என்றும் கூட்டமைப்பினர் கூறும் பொய்யைவிடப் பெரிய பொய் இந்த உலகில் இருக்க முடியாது. இவர்கள் அப்பட்டமாகப் பொய் சொல்கிறார்கள் என்று குழந்தை பிள்ளைக்கும் புரியும். அதனைத் தெரிந்தும் இவ்வாறு சொல்கின்றார்கள் என்றால் தமிழ் தலைவர்களின் ஏமாற்று வித்தையின் அளவுதான் என்ன?
தமிழ் மக்களிற்கான அரசியலின் மூலம் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், புதிதாகச் சொத்துக்களைச் சேர்ப்பதற்காகவும், வண்டி வாகனங்களில் ஓடுவதற்காகவும், நாடாளுமன்ற கதிரை சுகங்களை அனுபவிப்பதற்காகவும் இவ்வாறான பொய்களைத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
கோட்டாபாய ராஜபக்ச இலங்கை இருப்பது பொருளாதாரப் பிரச்சினை என்று எப்போதும் சொல்லி வருகிறார். எனவே தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்றோ அல்லது அதற்குத் தீர்வுகாண வேண்டும் என்றோ அவர் மனதில் எந்த சிந்தனையும் கிடையாது.
அத்தகைய சிங்களத் தலைவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கான தீர்வு வரும் என்று சொல்லுவதும், நம்புவதும் எத்தகைய முட்டாள்தனம். இந்த வருடக் கொள்கைப் பிரகடனத்தில் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு வரும் என்று இவர்கள் நம்புவதோ, எதிர்பார்ப்பதோ தமிழ் தலைமைகளின் கோமாளித்தனமேயன்றி வேறெதுவுமில்லை.
கட்டுரையாசிரியர் தி.திபாகரன்