பிரதமரின் வருகைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதா! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்திற்காக நெடுங்கேணி பிரதேசத்திற்கு இன்று (20.04) பிரதமர் வருகை தந்திருந்த நிலையில் பட்டிக்குடியிருப்பு மற்றும் ஒலுமடு பிரதேசங்களுக்கான மின் விநியோக மார்க்கங்களில் மின் துண்டிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரதமரின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொருத்தப்பட்ட கருவிகளுக்கும் மற்றும் குறித்த பிரதேசத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காவே பட்டிக்குடியிருப்பு, மாராஇலுப்பை, ஒலுமடு போன்ற பிரதேசங்களுக்கான மின்சார விநியோக மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டு நெடுங்கேணி நகர மத்திக்கு மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செயற்பாட்டில் பொலிஸார் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சுடத்தியுள்ளனர்.
கட்சி பிரதிநிதி
இது தொடர்பில் ஏனைய கட்சி பிரதிநிதிகளினால் தேர்தல் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொதுமக்கள் மின்சார சபையின் முறைப்பாட்டு பிரிவோடு தொடர்பு கொண்டு கேட்டபோது, நெடுங்கேணி பிரதேசத்தின் உயர் மின் மார்க்கத்தில் தென்னை மரத்தின் ஓலை ஒன்று அழுத்திய நிலையில் காணப்பட்டமையினால் குறித்த பிரதேசங்களுக்கான மின்சாரம் இடையிடையே துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்தப் பிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சீர் செய்தமையே இந்த மின் துண்டிப்புக்கான காரணம் என தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.