யாழில் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் யாழ். மாநகர முதல்வர் எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து, தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் எதிராக சட்ட வடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து தனியார் துறையினர் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பேருந்து நிலையத்திற்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் விஜயத்தினை மேற்கொண்ட யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு குறித்த விடயத்தினை தெளிவுபடுத்தி, இன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தான் வெளி மாவட்டத்திற்கான சேவைகள் இடம்பெறும் எனவும், குறிப்பாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பஸ் நடத்துனர் சாரதிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் தமது உயர் மட்டத்திலிருந்து தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணத்துக்கு பொறுப்பான அதிகாரி அல்லது சாலை முகாமையாளருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த யாழ். மாநகர முதல்வர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் பல்வேறுபட்ட கூட்டங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளை அழைத்த போதும், அவர்கள் சமூகமளிக்கவில்லை. தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
எனவே இனியும் அனுமதிக்க முடியாது இன்றிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்துதான் குறித்த சேவைகள் இடம்பெற வேண்டும். அதனை தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் தாங்கள் பேருந்து சேவையை நிறுத்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது இ.போ.ச சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







