மாண்டஸ் புயலின் தாக்கம்! கொழும்பிலிருந்து சென்னைக்கான விமானம் இரத்து
மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதன் காரணமாக சில விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25இற்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரான்ஸின் ரீயூனியனில் கொழும்பு, அபுதாபி ஆகியவற்றுக்கான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, கடப்பா, மைசூர், பெங்களூரு, மதுரை, விஜயவாடா, மங்களூரு, காலிகட், ஹூப்ளி, கண்ணூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் நிறுத்தப்பட்டன.
சில விமானங்கள் பெங்களூரிற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
வளி மாசடைதல் காரணமாக விமான பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக இலங்கை வளி மண்டலத்தில் தூசி நிறைந்து காணப்படுகின்றது.
எனினும் இந்த நிலைமையானது விமானப் பயணங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை இதுவரையில் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடையின்றி முன்னெடுக்கப்படும் விமான பயணங்கள்
பொதுவாக இந்தக் காலப் பகுதியில் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வரும் என கட்டுநாயக்க விமான நிலைய பிரதான விமான கட்டுப்பாட்டு அதிகாரி நிசான் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சர்வதேச விமான பயணங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
