இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களுக்கான எரிவாயுவினை விநியோகிக்க ஆலோசனை
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல மக்களுக்கும் தேவையான எரிவாயு வழங்கும் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாண மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒத்துழைக்காவிட்டால் இராணுவத்தினரின் உதவியுடன் விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்.மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக இராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எரிவாயுவை வழங்க மாற்று நடவடிக்கை
இந்த வாரம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினரால் நாடுபூராகவும் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயுவினை குடும்ப பங்கீட்டு அட்டைக்கு விநியோகிக்க முற்பட்டபோது யாழ். மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் குடும்ப அட்டை மூலம் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளது.
அதேவேளை எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் போது எரிவாயு விநியோகஸ்தர்களால்
இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதைக் கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் உதவியினை
பயன்படுத்திக் குறித்த எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.