வடக்கில் கல்வித் துறை பின்னடைவுக்கு நிர்வாகமே காரணம் : வவுனியாவில் பிரதமர்
வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம்.
விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம்.
கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம்.
விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா




