மொழி பயன்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தகவல்
நாம் இன்னொரு மொழியைக் கற்பதன் ஊடாக எமது சேவையை வினைத்திறனாக்குவதுடன் மாத்திரமல்லாது தொடர்பாடல் இடைவெளியையும் குறைத்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வடக்கு மாகாண சபையுடன் இணைந்து மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு நடத்திய சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் பட்டமளிப்பு விழா வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை காலை (13.10.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில்,
ஹிந்தி மொழி கற்பிக்க எதிர்ப்பு
டிப்ளோமா கற்கை நெறியின் இரண்டாவது தொகுதியினர் இன்று வெளியியேறுகின்றனர். மூன்றாவது அணியினருக்கான கற்கைநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எல்லாவற்றுக்கும் மொழி முக்கியம். தாய் மொழியான தமிழ் மொழிக்கு மேலதிகமாக நாங்கள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும்.
ஏனைய மொழிகளை அறிந்திருந்தால் சிறப்பாக பணியாற்ற முடியும். யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி கற்பிக்கப்பட்டபோது சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்கள். நாங்கள் இன்னொரு மொழியை அறிந்திருப்பதில் தவறில்லை. எங்களை நாங்கள் வளர்த்துக் கொள்வதற்கு பிறமொழியை அறிந்திருப்பது உதவும்.
நாங்கள் எங்கள் கலாசாரத்தை, பண்பாட்டை, பிரச்சினையை மற்றையவர்களுக்குச் சொல்லவேண்டுமானால் அவர்களுடைய மொழியை அறிந்திருப்பது அவசியம். தொடர்பாடலுக்கு இலகுவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 35 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சமிந்த மாலேஹம, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை கலாநிதி எஸ்.கண்ணதாசன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம் எழிழரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







