மன்னாரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை
வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் 'எமது காலம்' எனும் கருப்பொருளில் 'பயணிக்கும் வரலாற்று' அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைக்கான செயல்திட்ட நடவடிக்கை கூட்டம் நேற்று (30) மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் பழைய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வரலாற்று ரீதியான பதிவுகள்
இதற்கான ஏற்பாடு திட்டம், மன்னார் மாவட்டம் தொடர்பான வரலாறு, மற்றும் மன்னார் மாவட்ட எல்லைகள், மன்னார் மாவட்டத்தின் சிறப்பு, சமயம், கலாசாரம், பண்பாடுகள், கலை இன்னும் பல்வேறு வரலாற்று சிறப்புகள் தொடர்பான ஆய்வுகள் தரவுகள் மற்றும் பல்வேறு தரப்பினர்களையும் அறிந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் வரலாற்று ரீதியான பதிவுகள் அறியப்படாத நிலையில் குறித்த நிகழ்வின் ஊடாக மக்கள் பயன் பெறும் விதத்தில் குறிப்பாக மாணவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளும் விதத்தில் பயணிக்கும் அருங்காட்சியகம் முன்னெடுக்கும் படி மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
குறிப்பாக வளவாளர்கள் தமிழில் தமது கருத்துக்களை ஆவணப்படுத்தல்களை முன் வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் பயணிக்கும் அருங்காட்சியகம் திட்டத்தினூடாக பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.