கடற்றொழிலாளர்களுக்கு மின்சார மோட்டார் படகுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை
கடற்றொழிலாளர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு பற்றரியில் இயங்கக்கூடிய, மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த நடவடிக்கை
இவை 100 கிலோமீற்றர் தூரம் பயணிக்கக்கூடியவை. இதற்காக நாளொன்றுக்கு 86 ரூபா மாத்திரமே செலவு ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மண்ணெண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்தி இயங்கும் படகுகளில் சூரியப்படலங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விசேட நடமாடும்
சேவையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்ததுடன், இதன் மூலம் மீனவர்களின் பல
பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடிருந்தமை
குறிப்பிடத்தக்கது.