மாவீரர் தினத்தை குழப்பும் அரசாங்கத்தின் செயற்பாடு: செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு (Video)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரை பயன்படுத்தி மட்டக்களப்பில் மாவீரர் தினத்தை குழப்பும் வகையில் அரசாங்கம் கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று (27.11.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்கட்டிச்சோலை, வாகரை பகுதிகளில் மாவீரர் தினம் இன்று 27ஆம் திகதி நடைபெறாது நாளை 28ஆம் திகதி நடைபெறும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை வன்மையாக கண்டிக்கின்றேன்.
மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு
இன்றைய நாள் தமிழர்களின் சரித்திரத்தில் ஒரு புனிதமான நாள்.
தமிழர்களின் விடுதலைக்காக,தமிழர்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக, தமிழர்களின் தேசியம், உரிமை, சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வுக்காக தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்த எங்களுடைய உறவுகளை மாவீரர்களை நினைவுகூருகின்ற புனிதமான நாள்.
வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து துயிலும் இல்லங்களும் இன்றைய நாளில் எழுச்சிகோலம்பூண்டுள்ளதுடன் இன்று மாலை 6.05மணிக்கு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கூடி மாவீரர்க்கு விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்துகின்ற புனிதமான நிகழ்வு நடைபெறவுள்ளது.
சில துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதன் காரணத்தினால் அங்கே சென்று அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலைமையிலே அந்த துயிலும் இல்லங்களுக்கு அண்மையில் இருக்கக்கூடிய பகுதிகள் தயார்படுத்தப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய பொது அமைப்புகளும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டிருக்கின்றார்கள்.
வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்
இன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகியிருக்கின்ற நிலைமையிலே இதனை குழப்புவதற்கான ஏற்பாடுகளில் அரச தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு முழுவதுமே அரச புலனாய்வுப் பிரிவினருடைய மறைமுகமான, நேரடியான அச்சுறுத்தல்களும் இராணுவத்தினரின் தலையீடுகளும் குழப்பங்களும் இருந்துகொண்டிருக்கின்ற ஒரு சூழலிலே கடந்த இரவு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலே வாகரை, கொக்கட்டிச்சோலை போன்ற பிரதேசங்களில் துண்டுப்பிரசுரமொன்று வழங்கப்பட்டுள்ளது.
27ஆம் திகதியான இன்று நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று இடம்பெறாதென்றும் நாளைய தினம் 28ஆம் திகதி இடம்பெறும் என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டிருக்கின்றது.
இந்தத் துண்டுப் பிரசுரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய பெயரிலே வெளியிடப்பட்டிருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மாவீரர் தின நிகழ்வை குழப்ப விரும்புகின்ற தரப்பினாலேயே இது வெளியிடப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் நிகழ்வை தடுப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கின்ற தரப்பு அரச தரப்பு, இராணுவம், பொலிஸ், உளவுத்துறையினராகும். இவர்கள் மறைமுகமாக மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச நெருக்கடிகள் காரணமாக இந்த நிகழ்வை இம்முறை தடைசெய்ய முடியாத நிலைமையில் மக்களை திசைதிருப்பி இந்த நிகழ்வு நடைபெறுவதை குழப்புகின்ற முயற்சிகளில் அரசாங்கம் தன்னுடைய எடுபிடிகளினூடாக ஈடுபட்டிருக்கின்றது என்பது எங்களுடைய சந்தேகமாகும். மக்கள் இந்த துண்டுப்பிரசுரங்களை பார்த்து ஏமாந்துவிடக்கூடாது.
திட்டமிட்டபடி இன்று மாலை 6.05 மணிக்கு வடகிழக்கிலிருக்கக்கூடிய அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்ற துயிலும் இல்லங்களில் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற இடங்களிலும் திட்டமிட்டபடி நடைபெறும்.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இன்றைய நாளில் அனைத்து தமிழ் மக்களும் உங்கள் அனைத்துக் கடமைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த நிகழ்விலே கலந்துகொண்டு எங்கள் தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூருகின்ற புனிதமான நிகழ்விலே கலந்துகொள்ளுமாறு அன்பாகவும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
கோழைத்தனமான செயற்பாடுகளை கைவிட்டு தமிழர் தேசத்தினுடைய உரிமைகளை அங்கீகரித்து தமிழ்த்தேசியம் இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட ஓரு அரசியல் தீர்வினை எட்டுவதற்கு முயற்சிசெய்வதை விடுத்து இந்த கீழ்த்தரமான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது.
உங்களது ஏவலாளிகளாகயிருப்பவர்கள் ஊடாகவும் இந்த
முயற்சிகளை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்திகூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.