எரிபொருட்கள் பதுக்கிவைப்பு: பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளின் நடவடிக்கை(Video)
எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என்பன பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் இந்த எரிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு நேற்று (16) இரவு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்கள் பதுக்கிவைப்பு
எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு மக்களுக்கு வழங்காது பதுக்கி வைத்திருப்பதாக மக்கள் மன்னார் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் இணைந்து குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாரிகளின் நடவடிக்கை
இதன் போது குறித்த எரிபொருள் நிலையத்தில் 2 ஆயிரத்து 47 லீற்றர் பெட்ரோல் 3 ஆயிரத்து 153 லீற்றர் டீசல் மற்றும் 3 ஆயிரத்து 196 லிட்டர் சுப்பர் பெட்ரோல் ஆகியவை பதுக்கிவைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த எரிபொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை பதுக்கிவைத்தமை குறித்து மன்னார் மாவட்ட பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.