பாடசாலை முறைகேடுகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக நடவடிக்கை
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஊழல், முறைகேடுகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரு முன்னணி பாடசாலையில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஆவணங்களுடன் அதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடகவியலாளருக்கு எதிராக விசாரணை
ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு கடந்தவாரம் அந்த பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அவர் மீது முறைப்பாடளிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பாடசாலையின் அதிபரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், முறைகேடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கணக்காய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஊடகவியலாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் அதனை சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தியதோடு, நடைப்பெற்ற ஊழல்.முறைகேடுகள் தொடர்பில் உரிய திணைக்களம் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆவணங்கள் வெளியிடப்படுவதனை தடுக்கும் அதிபர்
பாடசாலை அதிபர் தனது ஊழல், முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் வெளிவருவதனை தடுக்க முயற்சி செய்துள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி குழுவினை கூட்டி கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை இப்பொழுது வெளியிடுவதாக ஊடகவியலாளர் மீது குற்றம் சுமத்தி அவ் ஆவணங்கள் வெளியிடப்படுவதனை தடுக்குமாறும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாடசாலை அதிபரால் பொலிஸாரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆதாரங்களுடன் முறைகேடுகளை வெளிப்படுத்தியதன் காரணமாக தம்மால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பாடசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு கூறி அனுப்பிவைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.