நியூசிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மருத்துவர் பலி! - இரு இளைஞர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு
நியூசிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விபத்தை ஏற்படுத்திய காரின் பயணி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதியன்று Invercargill என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையின் மருத்துவரான ஜியோவன் வின்சென்ட் அந்தோனி டி க்ரூஸ் (81) கொல்லப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக 19 வயதான இளைஞர் Invercargill மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையானதாக ஸ்டார் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. க்ரீட் மைக்கேல் பெர்கின்ஸ் என்ற இந்த பயணி, விபத்தின்போது காயம் அல்லது மரணத்தை தடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விபத்து சம்பவம் தொடர்பாக காரின் ஓட்டுநரான 21 வயது இளைஞரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். மதுபான பாவனையால் மரணத்தை உண்டாக்கியது மற்றும் விபத்துக்குப் பின்னர் காயம் அல்லது மரணத்தை தடுக்க தவறியதாக அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இருவரும் மே 4 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள்.
இலங்கையில் பிறந்த மருத்துவரான டி க்ரூஸ், பல தசாப்தங்களாக நியூஸிலாந்து சவுத்லேண்டில் விருது பெற்ற பளுதூக்கும் போட்டியாளராகவும், பளுதூக்குதல் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.