ரணிலைக் கெளதம புத்தனும் கதிர்காமக் கந்தனும் காப்பாற்றட்டும்! மனோ கணேசன்(Video)
இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கைத் தீவின் தமிழ் பெளத்த வரலாற்றைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பெளத்த வரலாறு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
அதன்போது இலங்கைத் தீவின் தமிழ் பெளத்த வரலாற்றைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்ரமசிங்க கருத்துக் கூறியுள்ளார்.
இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகின்றார்கள்.
அந்த விஜயன் வந்து இறங்கிய கதை பொய்யென்று என்னைத் தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவு கூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு பின்னர் அதை இரண்டு வருடங்களில் மீள பெற்றதைப் போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதைப் போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகின்றார்கள்.
தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன்.
மறுபிரசுரம்
இந்நோக்கில், 2018ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.
பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றைப் பற்றி சான்றுகளுடன் எழுதிய 'தமிழ் பெளத்தன்' (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில் இல்லாமல் இருந்தது.
அந்த நூலைத் தேடிப் பிடித்து, பேசி பேராசிரியரின் அனுமதியைப் பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.
அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்தார்கள் என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை.
இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் போட்டுக் கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்தக் கெளதம புத்தனும், கதிர்காமக் கந்தனும் காப்பாற்றட்டும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri
