கல்கிஸ்சை - கே.கே.எஸ் இடையிலான சிறப்பு கடுகதி ரயில் சேவை இன்று முதல்
கல்கிஸ்சையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை நோக்கி செல்லும் குளிர்சாதன வசதிகளுடன் 520 ஆசனங்களை கொண்ட சிறப்பு கடுகதி ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு கடுகதி ரயில் சேவை வார இறுதியில் நடத்தப்படும் என திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஞாயிறு இரவு புறப்படும்
10 முதல் வகுப்பு ரயில் பெட்டிகளை கொண்ட இந்த ரயில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் காங்கேசன்துறை- யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்சை நோக்கி புறப்படும்.
இந்த ரயில் ஒரு ஆசனத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணம் செய்வோர் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.