சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்: தீபன் தீலீசன்
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் எமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இதனைத் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நீண்ட கால பிரச்சினையாகக் காணப்பட்ட சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால், இன்று வரை சம்பள முரண்பாட்டைப் பகுதியாகத் தீர்ப்போம் எனக் கூறிய அரசு, இன்னமும் அது தொடர்பாக வர்த்தமானியை வெளியிடவில்லை.
அரசு கூறியது போன்று ஜனவரி மாதம் 20ஆம் திகதி மூன்றில் ஒரு பங்கு சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால், ஜனவரி 5ஆம் திகதி அதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட வேண்டும். இன்று வரை குறித்த செயற்பாடு நடைபெறவில்லை.
கடந்த 24 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இம்முறை அரசு தாம் வழங்கிய வாக்குறுதியைச் சம்பள அதிகரிப்பில் காட்டவில்லை என்றால் நாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
அரசு தற்போது தேவையில்லாமல் சொந்த ஆடம்பரத்துக்காகச் செலவழித்து வருகிறது.பொருளாதார கொள்கை இல்லாமல் தான் நாட்டு இப்போது பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.
அதேவேளை படித்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தாமல், இராணுவத்தை அரச நிர்வாகக் கட்டமைப்பில் கொண்டு வந்துள்ளமையால் நாடு இராணுவ ஆட்சிக்குள் சென்றுள்ளது.
தங்களுடைய விடயங்களை மூடி மறைப்பதற்காக, மக்களைத் துன்பத்தில் தள்ளியுள்ளனர்.
மாதம் 35 ஆயிரத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். ஆனால், அரசும்
அரசு சார்ந்தவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளார்.



