இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோவிட் வைரஸின் சுமார் 26 திரிபுகள்! இராணுவ தளபதி தகவல்
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் - 19 வைரஸின் புதிய திரிபு தொற்றுக்கு உள்ளான 16 பேர் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 13 பேர் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவிட் - 19 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் திரிபின் தொற்றுக்கு உள்ளானவர்கள் சைப்ரஸ், துபாய், ஜோர்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். கொழும்பு - ஹெவ்லொக் வீதியில் கட்டட நிர்மாண பணிகள் நடைபெறும் இடத்திலும், அவிசாவளையிலும் புதிய வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளான இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் நெருங்கி பழகியவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 14 நாட்கள் என்ற தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26ஆம் திகதி முதல் 92 கோவிட் - 19 தொற்றாளர்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைகளில் இந்த 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை கோவிட் - 19 வைரஸின் சுமார் 26 திரிபுகள் கண்டறியப்பட்டுளளன எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.