தன்னிச்சையான வருமான வரிக்கொள்கையை நீக்க வேண்டும்:யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(Photo)
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தி இருக்கின்ற தன்னிச்சையான வருமான வரிக்கொள்கையை நீக்கி வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும் என யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்(02) ஊடக சந்திப்பை நடத்தியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க போராட்டம்
மேலும் தெரிவிக்கையில், இந்த வரிக்கொள்கையின் மூலம் வருடம் ஒன்றுக்கு இரண்டு
மாதத்திற்கு மேற்பட்ட வேதனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் வைத்தியர்கள்
இருக்கின்றனர்.இது வைத்திய துறையை மட்டுமல்ல ஏனைய தொழிற்துறையையும்
பாதித்துள்ளது.
எவரையும் பாதிக்காத வகையில் வருமான வரிக்கொள்கை நாடாளுமன்றம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 2022இல் வரிக்கொள்கையின் காரணமாக 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
இதனால் மனிதவலு பற்றாக்குறையை வைத்தியதுறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் ஏற்படுத்தும் இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
வரிக்கொள்கை
ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற கட்சி தலைவர்களுக்கும் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் வரிக்கொள்கை தொடர்பாக தெரியப்படுத்தி இருந்தோம்.
வரிக்கொள்கை தொடர்பான இறுதி வாசிப்பின் போது நாடாளுமன்ற முன் எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். அதனை செவிமடுக்காமல் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
எதிர்வரும் காலங்களில் வருமான வரிக் கொள்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆராயவுள்ளோம்.
எம்முடைய கோரிக்கை ஏற்று வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்.
மேலும் சம்பளம் வழங்கப்படும் திகதிகளை கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்த
தீர்மானித்துள்ளோம்.”என கூறியுள்ளனர்.