எரிவாயு அடுப்பு வெடித்து சிகிச்சைப்பெற்று வந்த பெண் உயிரிழப்பு
சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
குண்டசாலை நாட்டரன்பொத பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த முதலாம் திகதி குறித்த பெண் சமைக்க தயாராகிக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
எரிவாயு விபத்தினால் குறித்த பெண் உயிரிழந்துள்ள போதும் விபத்துக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
