வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு

Jaffna Kilinochchi Sri Lanka Northern Province of Sri Lanka
By Independent Writer Mar 01, 2024 12:04 AM GMT
Report
Courtesy: Nada. Jathu

உலகம் முழுவதுமே மனிதனின் தன்னிச்சையான செயற்பாடுகளால் தனது இயற்கையை இழந்து சமநிலையைத் தக்க வைக்க முடியாத சூழலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது இன்றைய யதார்த்தமாகின்றது. 

இவற்றை தடுப்பது என்பது ஒரு முரண்நிலை விவாதமாகும் இவற்றை முகாமைத்துவம் செய்வது என்பது மட்டுமே சாத்தியமானதும், சாதகமானதும் எதிர்கால உலக இயக்கத்திற்கு சாதுரியமானதும் ஒரு செயற்பாடாகும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த வள அழிப்புக்கள் அமேசனில் தொடங்கி புன்னாலைக்கட்டுவன் வரைக்கும் மாப்பியாக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் ஆச்சரியமான விடயம் யாதெனில் மூன்றாம் உலக நாடுகளில் இவற்றை முகாமை செய்ய வேண்டிய அரசுக்கள் மற்றும் பொறுப்புடைய அரச நிறுவனங்களே இந்த இயற்கை வளச்சுரண்டல் தொழிலில் பின்னணியாக செயற்பட்டு வருகின்றன.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில தனவந்தர்கள் ஒரு சில அரச அதிகாரிகள் (இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட்டவர்கள்) தங்களது பணப்பைகளை இச்செயற்பாடுகளில் நிரப்பி வருவது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. 

முதலாவதாக வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மணல் வியாபாரம். இது ஒரு இயற்கை வளமாகும். இதற்குரிய வழங்கலானது பாரபட்சமின்றி கிரமப்படுத்தப்பட வேண்டுமே அன்றி வியாபாரமாக்க முடியாது. 

மணல் விநியோகம்

இச்சுரண்டலால் மிகவும் பாரதூரமாக பாதிக்கபடும் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் ஆகும். இங்கே வடபகுதி மணல் விநியோகத்தினை ஒரு வரைபடத்திற்குள் அமைப்பீர்களாக இருந்தால் மணல் விநியோக அனுமதிகள் அனைத்தும் யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கே வழங்கப்படுகின்றது.காரணம் அங்கேயே வழங்கலுக்கு உரித்தான வகையில் மணல்கள் உரிய தரத்துடன் காணப்படுகின்றன.

மணல் நுகர்வு 90 சதவீதமானது யாழ்.மாவட்டத்திலேயே காணப்படுகின்றது. இதுவே இக்கொள்ளைச் சம்பவத்திற்கு மிகப் பிரதானமானதொரு காரணியாக அமைகின்றது.

தற்சமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியான மணல் அகழ்விற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அகழ்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மணல் அகழ்வு மற்றும் விற்பனை அனுமதி வேறாகவும், வழித்தட அனுமதி வேறாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலேயே பேணப்படுவது திருட்டுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கின்றது. 

மணல் கொள்ளை 

இம்மணல் வியாபாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் 22 வயதுடைய ஒரு ரிப்பர் உரிமையாளரும், சாரதியுமான ஒருவர் பின்வருமாறு இத்தொழில் முறையை விளக்குகின்றார்.

ஒரு லோட் 3 கியுப் மணலை அனுமதி வழங்கப்பட்ட மணல் யாட்டில் இருந்து தன்னால் ரூபா 22,500.00 க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இம் மணலை யாழ்ப்பாணம் கொண்டு சென்று ரூபா 62,000.00 – 65,000.00 வரைக்கும் மாசி மாத இறுதிவார நிலவரத்தின்படி விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கின்றார்.

இச்செயற்பாடு காலை 7.00 க்கு முல்லைத்தீவில் ஆரம்பித்து அண்ணளவாக 11.00 மணிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முடிவடைந்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றார். 

இவ் வழித்தடத்தில் பயணிக்கும்போது எழுதுமட்டுவாள் பொலிஸ் காவலரணில் தொடங்கி யாழ்ப்பாணம் வரைக்குமான மணலைப் பறிக்கும் இடங்களுக்கு இடையே சராசரி 15 இடங்களில் பொலிஸாருக்கு ரூபா 300.00 – 500.00 வரைக்கும் இலஞ்சம் வழங்குவதாக தெரிவிக்கின்றார்.

இதில் பெருந்தெருக்களுக்கான போக்குவரத்து பொலிஸார், கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களை சேர்ந்தவர்களாக போக்குவரத்து பொலிஸார், கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் (சீருடை தரிக்காது ரீசேட்டுடன் முச்சக்கரவண்டியில் யுக்திய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்), இவற்றுக்கு மேலாக பாடசாலைகளின் அணுகுதலுக்கான கடமைகளுக்காக மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சங்கத்தானை, நுணாவில் மற்றும் மாகாண சபையின் விசேட தேவைகளுக்காக கைதடியில் கடமைசெய்யும் பொலிஸார் இவர்கள் அனைவரும் அடங்குகின்றார்கள்.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

இவ் ரூபா 300.00 - 500.00 க்கான பிரதி உபகாரம் யாதெனில் வழங்கப்பட்ட வழித்தட அனுமதிப்பத்திரத்தினை செல்லுபடியற்றதாக்காது விடுவிப்பது. பகல் 11.00 மணிக்கு பின்னரே திருட்டு மணல் ஏற்றம் ஆரம்பிக்கின்றது.

இம்மணலானது மணல் தேவை இருக்கும் யாழ்பாணத்திற்கு குறுகிய நேரத்தில் வழங்கத்தக்கதாகவும், ஏற்கனவே இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் பொலிஸார் உள்ள இடத்திலும் அமைவது வாகனத்திற்கும் சாரதிக்கும் பாதுகாப்பானது எனக் கருதிக்கொண்டு மிக அதிகமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அகழப்படுகின்றது. இதனாலேயே கிளிநொச்சி அதிகம் பாதிக்கப்படுகின்றது.

இந்த அகழ்வு இடங்களுக்கு பொறுப்பான பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு பணம், சாராயம், கசிப்பு முதற்கொண்டு பல்வேறு வகையான பொருட்கள் சிறப்பாக விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கின்றார்.

மேலதிகமான இன்னும் ஒரு தகவலையும் தெரிவித்தார் வட பகுதியில் அதிஉச்ச மதுபான வியாபாரம் உள்ளதான ஏ9 சாவகச்சேரியில் உள்ளதொரு மதுபானசாலையை சொல்கின்றார். 

முறைகேடான நடவடிக்கை

மணல் கொண்டுவரும் அனைத்து டிப்பர்களும் முறைகேடான நடவடிக்கைகளுக்கான மதுபானங்களை சாவகச்சேரியிலே கொள்வனவு செய்து தினமும் ஆயிரக்கணக்கான மதுபானப் போத்தல்கள் டிப்பர் சாரதிகளால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் சலுகைகளுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றதாம்.

இத் தகவலை வேறு ஒரு முறையிலும் உறுதிசெய்ய முடிந்தது. யாழ்ப்பாண பிராந்திய இறைவரித் திணைக்களத்தில் வருமான வரி செலுத்தும் மதுபானச் சாலைகளில் சாவகச்சேரி மதுபான விற்பனை நிலையமே முன்னிலை வகிக்கின்றது.

இது தனது பிரதேசத்தில் இருக்கும் சனச் செறிவுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 6 ஆவது அல்லது 7 ஆவது மதுபான விற்பனை நிலையமாக திகழ வேண்டும் என்பது தரவுகளின் அடிப்படையான முடிவாகும் இருப்பினும் முதன்நிலை வகிப்பது மேற்குறித்த டிப்பர் சாரதியின் கூற்றை உண்மையாக்கும் வகையில் கருதமுடிகின்றது.

முதலாவது லோட் மட்டும் சட்டபடியானது இரண்டாவதும் மூன்றாவதும் சட்டமுரணானது. மணல் திருடிய இடத்தில் இருந்து ஏ9 வரைக்குமான இடத்தில் பொலிஸ் பிடித்தால் தான் பிரச்சினை என்றும் ஏ9ல் ஏறிவிட்டால் தங்களிடம் வழித்தட அனுமதி இருப்பதாகவும், தங்களது பொலிஸார் தான் வீதிக்கடமையில் இருப்பதாலும் தனக்கு பயம் இல்லை என்றும், மணல் திருடும் இடத்தில் விசேட அதிரடிப்படையில் மாட்டினால் மாத்திரமே வழக்காக மாறும் எனவும் வெகு இலாவகமாக கருத்து தெரிவிக்கின்றார்.

ஏன் இந்த தொழிலை தான் தெரிவுசெய்தார் என்பதற்கான நியாயப்படுத்தலாக இருபத்தியைந்து இலட்சத்திற்கு உள்ளாக ஒரு வளமான டிப்பரை காசுக்க கொள்வனவு செய்ய முடிவதாகவும் நெருக்கடி இருப்பின் இதில் ஒரு தொகையை லீசாக பெறலாம் என்றும் சராசரி 03 லோட் (அவருடைய மொழியில் 01 ஜெனுவின் 02 கள்ளம்) ஏற்றினால் சாராசரி தனக்கு ரூபா 50,000.00 - 60,000.00 வரைக்கும் ஒரு நாளில் இலாபம் ஈட்ட முடிவதாகவும் கூறுகின்றார்.

இந்த கள்ள தொழிலுக்கு சாரதியை நியமிக்க கூடாது எனவும் ஏன் என்றால் இங்கே எதுவுமே நேர்மை இல்லாத இடத்தில் தனக்குப் பணியாற்றும் ஒரு சாரதிமட்டும் தனக்கு எப்படி நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார் என்ற அடிப்படையில் தானே நேரடியாக இதனை செய்வதாகவும் தன்னுடைய சினேகிதர்கள் 25 பேர் அளவில் தங்களது குழுவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

 பல மடங்கு இலஞ்சம்

மேலும் இதுபோல 05 அல்லது 06 குழுக்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். இங்கே அரச செயலக அதிகாரிகளின் செயற்பாடுகள் மாத்திரமே மிகவும் பலவீனமாக இருப்பதால் மணல் முதலாளிகள், டிப்பர் மாபியாக்கள், குறித்த பகுதிப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதீதமாக சம்பளங்களுக்கு மேலாக பலமடங்கு இலஞ்சங்களை பெற்றுக்கொள்கின்றார்கள்.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற பொலிஸார் பெரு விருப்புடன் வருவதாக அறிய முடியகின்றது காரணம் மூன்று மடங்கு சம்பளம் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

ஒன்றும் அகப்படாவிட்டாலும் வேகமானியுடன் வீதியில் இறங்கினால் போதுமாம் சாரதியின் வேகத்தினை அளவிட்டு அவர்களுக்கு காண்பித்து அக்குற்றத்தினை நிரூபித்து அதற்காக இலஞ்சம் தாங்களே பெற்றுக்கொண்டு விடுவிக்கின்றார்கள்.

குறித்த சாதனங்களில் பதிவு செய்யப்பட்டவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அதில் தவறு காண்பிக்கப்பட்ட வாகனங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தால் 5 சதவீதம் கூட சட்டத்திற்குள் அடங்கியிருக்காது. 

இயற்கை வளமானதொரு விடயத்தினை வினைத்திறனாக முகமைசெய்து அகழ்வதனையும் விநியோகத்தினையும் மேற்கொள்ள முடியாததொரு நிலையிலேயே அண்ணளவாக ரூபா 2,50,000.00 மேற்பட்ட மாதாந்த வேதனத்தினையும் இதர பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு மாவட்ட செயலருக்கும் கதிரைக்கு பாரமாக இருக்கின்றார்கள்.

கடந்த கால எரிபொருள் பங்கீடு தொடர்பில் அரசாங்கத்தினால் கியு ஆர் முறமை நடைமுறைப்படுத்த இருக்கும் விடயமே தெரியாமல் அந் நடைமுறை அறிவிப்பு வருவதற்கு சரியாக இருநாட்களுக்கு முன்னர்தான் மாவட்ட செயலகங்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டை அச்சிட்டு அதனை கிராம சேவகர் தொடக்கம் மாவட்ட செயலர்கள் வரை ஒப்பமிட்டு யுஎன்டீபியின் நிதி அனுசரணையில் மில்லியன் கணக்கில் அவசர கொள்வனவாக கொள்வனவு செய்து நடைமுறைபடுத்த முனைந்தார்கள்.

குறைந்தபட்சம் இவ்வாறு செலவு செய்த மில்லியன் கணக்கான யுஎன்டீபியின் பணம், மக்களின் அலைச்சல் ஆகியவற்றின் பிரதியுபகாரமாக ஒரு நாள் ஆகிலும் அவ் அட்டைகளுக்கு எரிபொருள் பங்கிடப்படவில்லை. இதுவே ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். 

இதில் குறித்த அலுவலகங்களின் அவசர கொள்வனவுகள் காரணமாக கொள்வனவு உத்தியோகத்தர்களும் கணக்காளர்களும் அச்சகங்களில் அடித்ததைத் தவிர ஒரு துளி பெற்றோலும் அடிக்கப்படவில்லை. 

வினைத்திறனாக மணலை பகிரந்தளிக்க ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஒவ்வொரு நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும், நியாய விலையில் இயற்கைவளம் அனைவருக்கும் கிடைக்கத்தக்க வகையில் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். 

மணல் அகழும் உரிமம் பெற்றவர்கள் சட்ட ரீதியான போக்குவரத்துடன் மணலை இந் நிலையங்களுக்கு விநியோகிக்க வேண்டும். இச் செயற்பாடுகளை தொழில்நுட்பத்தால் முகமை செய்யவேண்டும். 

இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும், செயற்கை முறைச் சந்தைச் சூழல் தவிர்க்கப்பட்டு ஒரு சமனிலையை உருவாக்கப்பட வேண்டும். இயற்கை வளத்தினை ஒரு சட்ட திட்டத்திற்கு அமைவாக பகிரவேண்டும்.

இவற்றை செய்வதற்கு கையறுந்த அறிவுடைய அரச நிறுவனங்களும் அதன் பிரதானிகளும் இப்போது இருக்கும் நடைமுறைகளை திருத்த முன்வராது சிறப்பான திட்டங்களை முன்மொழியாது தங்களது கடமைக்காக கடமையாற்றுவது இன்னும் இன்னும் அரச உத்தியோகம் புருசலட்சணம் என்ற வடபகுதிக் கோட்பாட்டுக்கே பொருத்தமானதாகும். 

சுண்ணாம்புக் கற்கொள்ளை வடக்கே இருந்த காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்கவைத்தால் அதன் மூலப்பொருளாக யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல் அகழ முடியாது என்றும் இதனால் இங்கே மீள அமைப்பது பொருத்தமான என்றதொரு சூழலியலாளர்களின் ஆர்வம் மிக்க கருத்தும் இத் தொழிற்சாலையின் மீள்நிர்மாணத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றன.

இச் சூழ்நிலையில் திருகோணமலையில் இயங்கிவரும் பிரபல சீமெந்து தொழிற்சாலைக்கு யாழ்பாணத்து சுண்ணாம்புக்கற்கள் தான் மூலப்பொருட்களாக கடந்த 04 வருடங்களாக அனுப்பட்டுவருவது ஏனோ இச் சூழலியலாளர்களுக்கும், சுற்றாடல் அதிகார சபைக்கும், மாவட்ட மற்றும் சம்பந்தப்பட்ட அகழ்வுக்குரிய பிரதேச செயலர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய மர்மமாக இருக்கின்றது.

மண்ணையும் மக்களையும் காப்போம் என திடசங்கற்பம் கொண்ட தமிழ் தேசிய வாதிகளுக்கும் தமிழ்ப்பற்று அரசியல் வாதிகளுக்கும் இச் சுரண்டல்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வடக்கில் சத்தமின்றி நடக்கும் ஒரு அழிப்பு | A Silent Destruction In The North

பூமிக்கு மேலே இருக்கும் கற்பாறையை உடைப்பதையும் பூமிக்கு கீழே இருக்கும் கல்லை அகழ்வதற்கும் இருக்கும் வேறுயாடுகள், அபாயங்கள் முதலியவற்றையும் அதற்குரித்தான சட்ட ஏற்பாடுகளையும் பின்பற்றாது அல்லது நடைமுறைப்படுத்தாது இவ் விடயம் தொடர்வது யாழ்ப்பாணம் என்றதொரு நிலத்தினை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் ஆகும். 

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பிரபல வர்த்தகர் உட்பட்ட இரு தரப்பினரால் தினமும் 15 க்கு மேற்பட்ட 8 கியுப் காவுதிறன் கொண்ட பாரஊர்திகளில் மிகவும் இலாவகமாக மூடப்பட்டு அனுப்படுவதாக அவற்றில் பணியாற்றும் ஒரு சாரதி தெரிவிக்கின்றார். தான் தென்பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 04 வருடங்களாக இப் பணியை செய்பவராகவும் தெரிவிக்கின்றார்.

இவ் வகையான மிகக் கூடியகாவுதிறனுக்கு அப்பாற்பட்ட அளவில் ஏற்றிச் செல்வதற்கு பொலிஸார் அனுமதிப்பார்களா என வினவியதற்கு தங்களது நிறுவனத்தில் பொலிஸாரின் விடயங்களை கையாள்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் எங்கேனும் சிக்கல் இருப்பின் அவர் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் சம்பந்தபட்ட பொலிஸாருக்கு யாழ்ப்பாணம் பெரிய இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்றும் அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மிகக் கௌரவமாக தெரிவிக்கின்றார்.

இவற்றை எங்கே ஏற்றுவீர்கள் என வினவியதற்கு எங்களுக்கு எங்களுடைய வாகன தரிப்பிடத்தில் பெரிய லோடரால் லோட் செய்யப்பட்டு வெளியே தெரியாதவகையில் தறப்பாளிடப்பட்டு கையளிக்கப்படும் எனவும், தங்களது மிகவும் பாதுகாப்பாக வெளித்தெரியாதவாறு முடக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் கல் ஏற்றுமிடமும் தங்களது நிறுவனத்தால் யாழ். புறநகர் பகுதியில் பேணப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றார்.

வளக்கொள்வனவு

அனுமதிக்கு புறம்பாக அகழப்படுகின்றது, அனுமதியற்று மாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது, சூழல் நேயம் மிக்க சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையாக அறியப்பெற்ற இலங்கை மற்றும் சர்வதேச தர நியமங்கள் பெற்ற சட்டரீதியான உற்பத்தி நிறுவனம் முறைகேடாக ஒரு வளக்கொள்வனவை மேற்கொண்டு மூலப்பொருளை உள்வாங்குகின்றது.

இதனை முகமை செய்யவேண்டிய அரசுநிறுவனங்கள் அதிகார சபைகள், உத்தியோகத்தர்கள் என்போர் உறங்குநிலை போன்று உறங்குகின்றார்கள். 

சூழல் நலன் சார்ந்து சிந்திக்காத எந்தவொரு மனிதனும் வாழத் தகுதியற்றவன் என்பதை வாழ்வின் இறுதிக்காலத்தில் மட்டுமே உணர்வான் இப்போது வாழும் வரைக்கும் மண்ணை விற்றென்ன கல்லை விற்றென்ன வாழ்ந்தால் போதுமே என்ற நிலைதான் இருக்கின்றது. 

இருக்கவேண்டியவர் இருந்தால் இன்று இப்படியெல்லாம் நடக்குமா என்ற முதியவர் ஒருவரது முனுகலுடன் மணல் டிப்பரையும்  லொறியையும் கடந்து செல்லவேண்டியுள்ளது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 01 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US