இலங்கையின் அடுத்த அரசியல் மாற்றம்! உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கும் தரப்பினர்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணிலா?
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதால் எமது கட்சியின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.

கட்சி என்ற ரீதியில் முன்னேற்றமடையும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைச்சரவைக்குள் இருந்தவர்களே பலவீனப்படுத்தினார்கள். அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனூடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் அருகில் இருந்தவர்கள் வகுத்த சூழ்ச்சியை நாங்கள் தோற்கடித்தோம்.
பொதுஜன பெரமுனவில் இருந்து சந்தர்ப்பவாதிகள் வெளியேறியுள்ளார்கள். கட்சியை முழுமையாக மறுசீரமைத்துள்ளோம். நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மக்கள் ஆதரவுடன் மீண்டும் வலுப்பெறுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளர் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானமல்ல. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம் என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri