இலங்கை தொடர்பான முக்கிய குழு நாடுகள் ஜெனீவாவில் சமர்ப்பித்த புதிய தீர்மானம்
ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதான அனுசரணையாளர்களால் ஜெனீவா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தீர்மானம், இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்த தீர்மானம் 51-1 இல் உள்ள ஆணையை புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
51-1 தீர்மானம்
மனித உரிமைகள் பேரவையில் அதன் தற்போதைய 57ஆவது அமர்வின் போது முன்வைக்கப்பட்ட, இந்த புதிய தீர்மானம், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51-1 இல் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை மற்றும் கோரப்பட்ட அனைத்து பணிகளையும் நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
அத்துடன், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் அவசியம் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அதன் முந்தைய தீர்மானங்களை நினைவுகூர்ந்து, 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 51-1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரிவான அறிக்கை
இந்தநிலையில், பேரவையின்; 57ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை, இலங்கை தொடர்பான முக்கிய குழு வரவேற்றுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கை, பேரவையின் 60ஆவது அமர்வில் ஊடாடும் உரையாடலில் விவாதிக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வு 2024 செப்டம்பர் 9ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 11 வரை ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |