மாமனிதர் ரவிராஜின் 59வது ஜனன தினத்தையொட்டிய ஓர் நினைவுப்பதிவு
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்தப் போராட்டத்தில் பல தமிழ்த் தலைவர்களை தமிழினம் இழந்து நிற்கிறது. அந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை துணிந்து நின்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்கூறி வந்த இளம் தமிழ் தலைவரான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 59வது ஜனன நாளையொட்டி அவர் குறித்த சிறு நினைவை இங்கு பதிவு செய்ய விழைகின்றேன் என மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் பகிர்ந்துள்ள பதிவு பின்வருமாறு,
தென்மராட்சி மண்ணில் புகழ்பூத்த ஆசிரியப் பெருந்தகைகளின் புதல்வராக 25-06-1962 இல் அவதரித்த ரவிராஜ் அவர்கள் ஆரம்பக்கல்வியை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் தொடங்கினார். பின்னர் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை தொடர்ந்த அவர், பின்னர் சட்டக்கல்லூரியில் இணைந்து 1987இல் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார்.
1990 இல் சட்டமா அதிபர் அலுவலகத்தில் இணைந்து கொண்ட அவர் 1993 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றி சட்டத்துறை நுணுக்கங்களைப் பெற்று வெளியேறினார். பின்னர் மனித உரிமை இல்லத்தில் இணைந்து 1996 வரை அங்கு பணியாற்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை அறிந்து கொண்டார். அதன் பின்னர் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்த அவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளூரிலும் சர்வதேசத்திலும் உரக்கக் குரல் கொடுத்தார்.
கொழும்பிலும், சர்வதேச நாடுகளிலும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார். வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் உறவுகளைப் பேணிய அவர், தான் சார்ந்த இனத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி வந்தார்.
இந்த கால கட்டத்தில் 1996இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து அரசியலில் கால்பதித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பல பதவிகளை அலங்கரித்த அவர் நெருக்கடியான கால கட்டத்தில் யாழ். மாநகரசபையின் மேயர் பதவியையேற்று சிறப்புறப் பணியாற்றினர். பின்னர் 2001 டிசம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், நாடாளுமன்றுக்கு தனது 39வது வயதில் காலடி பதித்தார்.
நாடாளுமன்ற இளம் உறுப்பினரான அவர், தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளில் தான் கொண்ட புலமை ஊடாக தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரங்களை நாடாளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் புட்டுப்புட்டு வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி நின்றன. தெற்கில் செயற்பட்ட, முற்போக்கு சிந்தனை கொண்ட, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிறிதுங்க ஜெயசூரிய, வாசுதேவ நாணயக்கார டாக்டர்.விக்ரமபாகு கருணாரத்தின, மனோகணேசன் போன்றவர்களுடன் கரம்கோர்த்த ரவிராஜ் அவர்கள், சிவில் கண்காணிப்பு குழு என்ற அமைப்பினூடாக தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார் வடக்கு கிழக்கில் தமிழர்கள் கொலை செய்யப்படுதல், கைதாகி சித்திரவதை செய்யப்படுதல் போன்றவற்றுக்கு எதிராக உரத்து குரல் கொடுத்தார்.
நீதிமன்றங்களூடாகவும், இராஜதந்திரிகளூடாகவும் குரல் கொடுத்து நியாயம் கேட்டார். பத்திரிகை வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஆணித்தரமாக, அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
2004 ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலிலும் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், ஸ்ரீலங்கா அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து குரல் கொடுத்து வந்தார்.
கொழும்பில் தங்கியிருந்து சிங்களத் தலைவர்களுடன் இணைந்து, அவர்களுக்கு புரிந்த மொழியில் தமிழர்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்தும் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்தும் எடுத்துக்கூறி தமிழ் சிங்கள மக்களிடையேயான புரிந்துணர்வுக்கு வித்திட்டார்.
கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் தனி ஒருவராக பங்கேற்று, உரத்த குரலில் கொடூரங்களை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொழும்பில் நடந்த போராட்டமொன்றில் பங்குபற்றிய மறுநாள், கொழும்பில், பட்டப் பகலில் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
39 வது வயதில் நாடாளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ரவிராஜ் அவர்களின் உயிர், அவரது 44வது வயதில் அதுவும் இளம் வயதிலேயே பறிக்கப்பட்டுவிட்டது. சொற்ப காலமே அவர் தமிழ் அரசியல் தலைமையில் இருந்த போதும் கொண்ட கொள்கையில் தான் இருந்து விலகாது, தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இளம் சட்டத்தரணியாக, இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், தனது துணிச்சலான செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்கள் மனதில் முக்கிய இடம்பிடித்து விட்டார்.
மேலும், மாமனிதர் ரவிராஜ் காட்டிய வழியில் அவரது துணைவியார் சசிகலா ரவிராஜும் அரசியலில் கால் பதித்துள்ளார். கடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டார். பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அடுத்து வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற்று மாமனிதர் ரவிராஜ் அவர்களின் வழியில் அவரும் பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும்.
அரசியலில் அவர்கள் சிறப்பாக செயல்பட ஆதரவு வழங்குவதே ரவிராஜிற்கு வழங்கும் கைமாறாகும் என்பதே தமிழ் மக்களின் சிந்தனையாகும். V. N.நவரத்தினம் , V.S குமாரசாமி ,மாமனிதர் நடராஜா ரவிராஜ் போன்ற அரசியல் நாகரிகமும், கண்ணியமும், ஆளுமையும், மக்கள் செல்வாக்கும் நிறைந்த அரசியல் தலைவர்களின் பின்னர் தென்மாரட்சி பகுதியிலிருந்து திறமை வாய்ந்த, நேர்மையான அரசியல் நாகரீகம் மிக்க, அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அதே நேரம் அது சிரத்தைக்கும் உரியதாகும். ஆனாலும் அவரது மகள் பிரவீனா ரவிராஜ் இங்கிலாந்திலுள்ள ரிக் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசிலில் சென்று தனது சட்டப் பட்டப்படிப்பை முடித்தவர் என்பதுடன் ,மும்மொழிகளிலும் பாண்டித்தியமும் புலமையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் இடத்தை நிரப்புவதற்கு தகுதியுடைய ஒரு சட்டத்துறை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப அரசியல் வாரிசு அரசியல் பற்றி பல்வேறு தர்க்கங்களும் திறனாய்வுகளும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டாலும் , தனது தந்தையையே, இந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக ஆகுதியாக்கிய அந்த குடும்ப வாரிசு, தனது தந்தையை பிரதியீடு செய்வதில் தவறில்லை.
மாமனிதர் நடராஜா ரவிராஜின்
அரசியல் பின்னணியில், ஆளுமை மிக்கவரும், சட்டமானியும், எல்லாவற்றுக்கும்
மேலாக அரசியலில் நாட்டம் உள்ளவருமான பிரவீனா ரவிராஜ் தந்தையின் சேவையை
தொடர்வதற்கு சிலர் கூறும் மேற்போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட காரணங்கள்
தடையாக அமையாது என்பது திண்ணம்.