சூடு பிடிக்கும் தேர்தல் களம்
இலங்கை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இம் மாதம் செப்டம்பர் 21 ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாடு தழுவிய ரீதியில் சூடு பிடித்துள்ளது.
இதனால் வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கை அரசியல் நிலவரம் வெவ்வேறாக மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
இம் முறை 38 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் இருந்த போதிலும் பிரதான வேட்பாளர்களாக சுயேட்சையாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சி தலைவராக செயற்பட்டு வரும் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியில் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுனவின் சார்பில் நாமல் ராஜபக்ச ஆகியோர்கள் காணப்படுகிறார்கள்.
இவர்களுக்கான மும்முனைப் போட்டி நிலவுகின்ற போதும் ஒவ்வொருவரும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை பல பக்கங்களை கொண்டமைந்ததாக வெளியிட்டுள்ளனர்.
இருந்த போதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய உத்தரவாதமளிக்கப்பட்ட மக்களுக்கான சாதகமான நிலை காணப்படுவது குறைவாக உள்ளது.
வேட்பாளர்களின் வெற்றி
இதனால் ஜனாதிபதி வேட்பாளர்களில் வெற்றியடைந்தவராக கருதப்பட்டு ஜனாதிபதியான பின் குறித்த விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்கள் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வடகிழக்கு சிறுபான்மை சமூகம் நமக்காக நாம் என்ற ரீதியில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் சார்பில் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனை களமிறக்கி உள்ளதுடன் பிரதான கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது எனலாம் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் தற்போது இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இருந்த போதிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் கணிசமான அளவு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றையாட்சி நீக்கப்படும் என எந்தவொரு பிரதான வேட்பாளரும் உத்தரவாதம் அளிக்காததால் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர் ஒரு புறம் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு வடகிழக்கில் உள்ள பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் திருகோணமலையில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடமும் இதனை தெரிவித்தனர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை முதன்மைப்படுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.
இருந்த போதிலும் சிறுபான்மை தமிழ் கட்சிகளில் ஒவ்வொரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரித்த போதிலும் பொதுக்கட்டமைப்பில் இருந்து தமிழ் போது வேட்பாளரை நிறுத்தி சிறுபான்மை மக்களுக்கான குரலாக செயற்பட முனைகின்றனர்.
17,140,354 வாக்காளர்கள்
இதனை மக்கள் உணர்ந்து தங்களுக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம் முறை 2024 செப்டம்பர் 21இல் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக இலங்கையில் 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
2019ல் நடந்த தேர்தலில் இந்த தொகையானது 15,992,096 ஆக காணப்பட்டு தற்போது அதிகரிப்பினை காட்டுகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் தேர்தல் களநிலவரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் ஜூலை 31செப்டம்பர் 10ஆம் திகதி வரை 3406 தேர்தல் சட்டமீறல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 54858 அஞ்சல் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் இம் மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்களிப்பு இடம் பெற்றுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 315,925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் ஆனால் 2019 ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் 288,868 ஆக காணப்பட்டது.
இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 449,686 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 2019ல் 409,808 ஆக காணப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 555,432 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 2019தேர்தலின் போது 513,979 ஆக காணப்பட்டது. இவ்வாறு இம் முறை வாக்காளர்களின் எண்ணிக்கையில் பாரிய கணிசமான அளவு அதிகரிப்பை காட்டுகிறது.
இருந்த போதிலும் 2005ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 50.29 வீதமான வாக்குகளை பெற்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார் இது போன்று 2019ல் 52.25 வீத வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானார்.
ஆனால் இம் முறை பிரதான வேட்பாளர்களுள் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை எந்தவேட்பாளரும் பெறமாட்டார்கள் என்ற கணிப்பும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது .
மக்கள் மத்தியில் பல தரப்பட்ட கருத்து கணிப்புக்களும் போலி வதந்திகளும் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது .இது தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CAFFE) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் கருத்து தெரிவிக்கையில்
"ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்களும், அதேப்போன்று வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்களும் அதிகரித்துள்ளன.
2024 ஜனாதிபதி தேர்தல்
சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் கண்காணிப்புகளின்படி, 2024 ஜனாதிபதி தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளன.
அத்துடன் 2019 ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது . தேர்தலுக்கு முந்திய காலப்பகுதிகளில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் மேற்கொண்ட கண்காணிப்புகளின்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டகூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுவது தெரியவந்துள்ளது.
இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு தடையாக இருப்பதாகவும் அதேபோன்று அமைதியான தேர்தலுக்கு தடையாக இருக்கின்றது” என்றார்.
இவ்வாறு சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்களால் வன்முறை அதிகரிக்ககூடிய வாய்ப்புக்கள் உருவாகலாம் என கஃபே அமைப்பு எச்சரித்துள்ளது.
அத்துடன் வாட்ஸப் குழுமங்ககளிலும், பேஸ்புக் குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான வீடியோ பதிவுகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதேப்போன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள் உள்ளதால் இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதாகவும் ,இவை வன்முறையாக மாறக்கூடும் எனவும் கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நீதியான தேர்தல் ஒன்று இம் முறை இடம் பெற வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கையின் பல பாகங்களிலும் களத்தில் இறங்கியுள்ளதுடன் பல அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுனர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசனை சந்தித்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வர முடியும் என்ற நிலை காணப்பட்டாலும் தமிழ் சமூகத்தின் இறுப்பையும் பலத்தையும் காட்ட மக்கள் வாக்குகளை சூரையாடாமல் தமிழ் பொது வேட்பாளர் என்பதும் பேசு பொருளாக மாறியுள்ளது .
இதனால் தமிழ் கட்சிகளை சேர்ந்த பலரும் பல கருத்துக்களை கூறினாலும் அரசியல் நிலவரங்களின் படி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஊடான களநிலவரம் மக்கள் மத்தியில் குறிப்பாக வடகிழக்கில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மக்களது உரிமைகளுக்கான குரலாக ஒலிப்பதாக காணப்படுகிறது. எனவே தான் சிறுபான்மை சமூகம் யார் ஜனாதிபதியானாலும் பெரும்பான்மை மக்களை விட எம்மால் திருப்திப்பட முடியாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |