வவுனியா - ஆச்சிபுரம் இளைஞர் படுகொலை தொடர்பில் 7 பேர் கைது: துப்பாக்கி மற்றும் வாள்களும் மீட்பு
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரஞ்சா என்றழைக்கப்படும் ஜோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த நபரின் கை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு பிறிதொரு இடத்தில் வீசப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி மீட்பு
குறித்த விசாரணைகளையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி சிதம்பரபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 4 வாள்கள், இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம்
குறித்த 7 பேரில் ஒருவர் காயம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இரு குழுவினருக்குமிடையில் ஏற்பட்டிருந்த நீண்ட நாள் பகையும்,
அதன் காரணமாக அவ்வப்போது இடம்பெற்ற மோதல்களின் தொடர்ச்சியாகவே குறித்த
தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.