பல நாடுகளிலிருந்து 67 இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை - இன்டர்போல் வலைவீச்சு
பல நாடுகளில் தலைமறைவாக பதுங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்டர்போல் பொலிஸாரின் உதவியுடன் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்களான இலங்கையர்களில் சிலர் போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவதால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
புலனாய்வுத்துறை
எனினும் பலர் தற்போது எந்தெந்த நாடுகளில் பதுங்கியிருக்கிறார்கள் என்பதை புலனாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.
அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் உதவியுடன் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே சுமார் 20 சந்தேக நபர்கள் ஏற்கனவே வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றவியல் குழு
நாட்டின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒப்பந்தக் கொலைகளில் கணிசமான பகுதியினர் இந்த வெளிநாடுகளை தளமாகக் கொண்ட குற்றவியல் குழு உறுப்பினர்களால் திட்டமிடப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறை இந்த வலையமைப்புகள் குறித்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த குற்றவாளிகளுக்கு போலி கடவுச்சீட்டுக்களை உருவாக்க உதவியதாக சந்தேகிக்கப்படும் குடிவரவு அதிகாரிகள் மீது தனி விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரவித்தார்.




