ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவிற்காக 650 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது?
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்காக 650 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஆணைக்குழுவின் இறுதி கட்ட நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட தொகை சேர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்த செலவு தொகை 650 மில்லியன் ரூபாவினை விடவும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு லட்சம் பக்கங்களைக் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 1ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையை அச்சிடுவதற்காக மட்டும் 10 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜனக டி சில்வா கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவின் எதிரில் 450 பேரும், பொலிஸாரின் எதிரில் சுமார் 1100 பேரும் இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை வழங்கியிருந்தனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.